This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Urdu
Cyrillic/Russian
இலை மலிந்த சருக்கம்
Back to Top
12.080 எறி பத்த நாயனார்
மல்லல்நீர் ஞாலந் தன்னுள் மழவிடை யுடையான் அன்பர்க் கொல்லைவந் துற்ற செய்கை உற்றிடத் துதவும் நீரார் எல்லையில் புகழின் மிக்க எறிபத்தர் பெருமை எம்மால் சொல்லலாம் படித்தன் றேனும் ஆசையாற் சொல்ல லுற்றாம்.
| [1] |
பொன்மலைப் புலிவென் றோங்கப் புதுமலை யிடித்துப் போற்றும் அந்நெறி வழியே யாக அயல்வழி யடைத்த சோழன் மன்னிய அநபா யன்சீர் மரபின்மா நகர மாகும் தொன்னெடுங் கருவூ ரென்னும் சுடர்மணி வீதி மூதூர்.
| [2] |
மாமதில் மஞ்சு சூழும் மாளிகை நிரைவிண் சூழும் தூமணி வாயில் சூழும் சோலையில் வாசஞ் சூழும் தேமலர் அளகஞ் சூழும் சிலமதி தெருவிற் சூழும் தாமகிழ்ந் தமரர் சூழும் சதமகன் நகரம் தாழ.
| [3] |
கடகரி துறையி லாடும் களிமயில் புறவி லாடும் சுடர்மணி யரங்கி லாடும் அரிவையர் குழல்வண் டாடும் படரொளி மறுகி லாடும் பயில்கொடி கதிர்மீ தாடும் தடநெடும் புவிகொண் டாடும் தனிநகர் வளமை ஈதால்.
| [4] |
மன்னிய சிறப்பின் மிக்க வளநக ரதனின் மல்கும் பொன்னியல் புரிசை சூழ்ந்து சுரர்களும் போற்றும் பொற்பால் துன்னிய அன்பின் மிக்க தொண்டர்தஞ் சிந்தை நீங்கா அந்நிலை யரனார் வாழ்வ தானிலை யென்னுங் கோயில்.
| [5] |
பொருட்டிரு மறைகள் தந்த புனிதரை இனிதக் கோயில் மருட்டுறை மாற்று மாற்றால் வழிபடுந் தொழில ராகி இருட்கடு வொடுங்கு கண்டத் திறையவர்க் குரிமை பூண்டார்க் கருட்பெருந் தொண்டு செய்வார் அவர்எறி பத்த ராவார்.
| [6] |
மழைவளர் உலகில் எங்கும் மன்னிய சைவ மோங்க அழலவிர் சடையான் அன்பர்க் கடாதன அடுத்த போது முழையரி யென்னத் தோன்றி முரண்கெட எறிந்து தீர்க்கும் பழமறை பரசுந் தூய பரசுமுன் னெடுக்கப் பெற்றார்.
| [7] |
அண்ணலார் நிகழும் நாளில் ஆனிலை யடிக ளார்க்குத் திண்ணிய அன்பு கூர்ந்த சிவகாமி யாண்டா ரென்னும் புண்ணிய முனிவ னார்தாம் பூப்பறித் தலங்கல் சாத்தி உண்ணிறை காத லோடும் ஒழுகுவார் ஒருநாள் முன்போல்.
| [8] |
வைகறை யுணர்ந்து போந்து புனல்மூழ்கி வாயுங் கட்டி மொய்ம்மலர் நெருங்கு வாச நந்தன வனத்து முன்னிக் கையினில் தெரிந்து நல்ல கமழ்முகை அலரும் வேலைத் தெய்வநா யகர்க்குச் சாத்தும் திருப்பள்ளித் தாமங் கொய்து.
| [9] |
கோலப்பூங் கூடை தன்னை நிறைத்தனர் கொண்டு நெஞ்சில் வாலிய நேசங் கொண்டு மலர்க்கையில் தண்டுங் கொண்டங் காலய மதனை நோக்கி அங்கணர்க் கமைத்துச் சாத்தும் காலைவந் துதவ வேண்டிக் கடிதினில் வாரா நின்றார்.
| [10] |
மற்றவ ரணைய இப்பால் வளநக ரதனில் மன்னும் கொற்றவர் வளவர் தங்கள் குலப்புகழ்ச் சோழ னார்தம் பற்றலர் முனைகள் சாய்க்கும் பட்டவர்த் தனமாம் பண்பு பெற்றவெங் களிறு கோலம் பெருகுமா நவமி முன்னாள்.
| [11] |
மங்கல விழவு கொண்டு வருநதித் துறைநீ ராடிப் பொங்கிய களிப்பி னோடும் பொழிமதஞ் சொரிய நின்றார் எங்கணு மிரியல் போக எதிர்பரிக் காரர் ஓடத் துங்கமால் வரைபோல் தோன்றித் துண்ணென அணைந்த தன்றே.
| [12] |
வென்றிமால் யானை தன்னை மேல்கொண்ட பாக ரோடும் சென்றொரு தெருவின் முட்டிச் சிவகாமி யார்முன் செல்ல வன்தனித் தண்டில் தூங்கும் மலர்கொள்பூங் கூடை தன்னைப் பின்தொடர்ந் தோடிச் சென்று பிடித்துடன் பறித்துச் சிந்த.
| [13] |
மேல்கொண்ட பாகர் கண்டு விசைகொண்ட களிறு சண்டக் கால்கொண்டு போவார் போலக் கடிதுகொண் டகலப் போக நூல்கொண்ட மார்பின் தொண்டர் நோக்கினர் பதைத்துப் பொங்கி மால்கொண்ட களிற்றின் பின்பு தண்டுகொண் டடிக்க வந்தார்.
| [14] |
அப்பொழு தணைய வொட்டா தடற்களி றகன்று போக மெய்ப்பெருந் தொண்டர் மூப்பால் விரைந்துபின் செல்ல மாட்டார் தப்பினர் விழுந்து கையால் தரையடித் தெழுந்து நின்று செப்பருந் துயரம் நீடிச் செயிர்த்துமுன் சிவதா வென்பார்.
| [15] |
களியா னையின்ஈர் உரியாய் சிவதா எளியார் வலியாம் இறைவா சிவதா அளியார் அடியார் அறிவே சிவதா தெளிவார் அமுதே சிவதா சிவதா.
| [16] |
ஆறும் மதியும் அணியுஞ் சடைமேல் ஏறும் மலரைக் கரிசிந் துவதே வேறுள் நினைவார் புரம்வெந் தவியச் சீறுஞ் சிலையாய் சிவதா சிவதா.
| [17] |
தஞ்சே சரணம் புகுதுந் தமியோர் நெஞ்சேய் துயரங் கெடநேர் தொடரும் மஞ்சே யெனவீழ் மறலிக் கிறைநீள் செஞ்சே வடியாய் சிவதா சிவதா.
| [18] |
நெடியோன் அறியா நெறியா ரறியும் படியால் அடிமைப் பணிசெய் தொழுகும் அடியார் களில்யான் ஆரா அணைவாய் முடியா முதலாய் எனவே மொழிய.
| [19] |
என்றவ ருரைத்த மாற்றம் எறிபத்தர் எதிரே வாரா நின்றவர் கேளா மூளும் நெருப்புயிர்த் தழன்று பொங்கி மன்றவ ரடியார்க் கென்றும் வழிப்பகை களிறே யன்றோ கொன்றது வீழ்ப்ப னென்று கொடுமழு எடுத்து வந்தார்.
| [20] |
வந்தவ ரழைத்த தொண்டர் தமைக்கண்டு வணங்கி உம்மை இந்தவல் லிடும்பை செய்த யானைஎங் குற்ற தென்ன எந்தையார் சாத்தும் பூவை என்கையில் பறித்து மண்மேல் சிந்திமுன் பிழைத்துப் போகா நின்றதித் தெருவே யென்றார்.
| [21] |
இங்கது பிழைப்ப தெங்கே இனியென எரிவாய் சிந்தும் அங்கையின் மழுவுந் தாமும் அனலும்வெங் காலு மென்னப் பொங்கிய விசையிற் சென்று பொருகரி தொடர்ந்து பற்றும் செங்கண்வாள் அரியிற் கூடிக் கிடைத்தனர் சீற்ற மிக்கார்.
| [22] |
கண்டவர் இதுமுன்பு அண்ணல் உரித்தஅக் களிறே போலும் அண்டரும் மண்ணு ளோரும் தடுக்கினு மடர்த்துச் சிந்தத் துண்டித்துக் கொல்வே னென்று சுடர்மழு வலத்தில் வீசிக் கொண்டெழுந் தார்த்துச் சென்று காலினாற் குலுங்கப் பாய்ந்தார்.
| [23] |
பாய்தலும் விசைகொண் டுய்க்கும் பாகரைக் கொண்டு சீறிக் காய்தழல் உமிழ்கண் வேழம் திரிந்துமேற் கதுவ அச்சம் தாய்தலை யன்பின் முன்பு நிற்குமே தகைந்து பாய்ந்து தோய்தனித் தடக்கை வீழ மழுவினால் துணித்தார் தொண்டர்.
| [24] |
கையினைத் துணித்த போது கடலெனக் கதறி வீழ்ந்து மைவரை யனைய வேழம் புரண்டிட மருங்கு வந்த வெய்யகோல் பாகர் மூவர் மிசைகொண்டார் இருவ ராக ஐவரைக் கொன்று நின்றார் அருவரை அனைய தோளார்.
| [25] |
வெட்டுண்டு பட்டு வீழ்ந்தார் ஒழியமற் றுள்ளா ரோடி மட்டவிழ் தொங்கல் மன்னன் வாயிற்கா வலரை நோக்கிப் பட்டவர்த் தனமும் பட்டுப் பாகரும் பட்டா ரென்று முட்டநீர் கடிது புக்கு முதல்வனுக் குரையு மென்றார்.
| [26] |
மற்றவர் மொழிந்த மாற்றம் மணிக்கடை காப்போர் கேளாக் கொற்றவன் தன்பால் எய்திக் குரைகழல் பணிந்து போற்றிப் பற்றலர் இலாதாய் நின்பொற் பட்டமால் யானை வீழச் செற்றனர் சிலரா மென்று செப்பினார் பாக ரென்றார்.
| [27] |
வளவனுங் கேட்ட போதில் மாறின்றி மண்காக் கின்ற கிளர்மணித் தோள லங்கல் சுரும்பினங் கிளர்ந்து பொங்க அளவில்சீற் றத்தி னாலே யார்செய்தா ரென்றுங் கேளான் இளவரி யேறு போல எழின்மணி வாயில் நீங்க.
| [28] |
தந்திரத் தலைவர் தாமும் தலைவன்தன் நிலைமை கண்டு வந்துறச் சேனை தன்னை வல்விரைந் தெழமுன் சாற்ற அந்தரத் தகல மெல்லாம் அணிதுகிற் பதாகை தூர்ப்ப எந்திரத் தேரு மாவும் இடையிடை களிறு மாகி.
| [29] |
வில்லொடு வேல்வாள் தண்டு பிண்டிபா லங்கள் மிக்க வல்லெழு முசலம் நேமி மழுக்கழுக் கடைமுன் னான பல்படைக் கலன்கள் பற்றிப் பைங்கழல் வரிந்த வன்கண் எல்லையில் படைஞர் கொட்புற் றெழுந்தனர் எங்கு மெங்கும்.
| [30] |
சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி வெங்குரல் பம்பை கண்டை வியன்துடி திமிலை தட்டி பொங்கொலிச் சின்ன மெல்லாம் பொருபடை மிடைந்த பொற்பின் மங்குல்வான் கிளர்ச்சி நாண மருங்கெழுந் தியம்பி மல்க.
| [31] |
தூரியத் துவைப்பும் முட்டுஞ் சுடர்ப்படை ஒலியும் மாவின் தார்மணி இசைப்பும் வேழ முழக்கமும் தடந்தேர்ச் சீரும் வீரர்தஞ் செருக்கி னார்ப்பும் மிக்கெழுந் தொன்றாம் எல்லைக் காருடன் கடைநாள் பொங்கும் கடலெனக் கலித்த வன்றே.
| [32] |
பண்ணுறும் உறுப்பு நான்கில் பரந்தெழு சேனை யெல்லாம் மண்ணிடை யிறுகான் மேன்மேல் வந்தெழுந் ததுபோல் தோன்றத் தண்ணளிக் கவிகை மன்னன் தானைபின் தொடரத் தானோர் அண்ணலம் புரவி மேல்கொண் டரசமா வீதி சென்றான்.
| [33] |
கடுவிசை முடுகிப் போகிக் களிற்றொடும் பாகர் வீழ்ந்த படுகளங் குறுகச் சென்றான் பகைப்புலத் தவரைக் காணான் விடுசுடர் மழுவொன் றேந்தி வேறிரு தடக்கைத் தாய அடுகளி றென்ன நின்ற அன்பரை முன்பு கண்டான்.
| [34] |
பொன்தவழ் அருவிக் குன்றம் எனப்புரள் களிற்றின் முன்பு நின்றவர் மன்று ளென்றும் நிருத்தமே பயிலும் வெள்ளிக் குன்றவ ரடியா ரானார் கொன்றவ ரிவரென் றோரான் வென்றவர் யாவ ரென்றான் வெடிபட முழங்குஞ் சொல்லான்.
| [35] |
அரசனாங் கருளிச் செய்ய அருகுசென் றணைந்து பாகர் விரைசெய்தார் மாலை யோய்நின் விறற்களிற் றெதிரே நிற்குந் திரைசெய்நீர் உலகின் மன்னர் யாருளார் தீங்கு செய்தார் பரசுமுன் கொண்டு நின்ற இவரெனப் பணிந்து சொன்னார்.
| [36] |
குழையணி காதி னானுக் கன்பராங் குணத்தின் மிக்கார் பிழைபடின் அன்றிக் கொல்லார் பிழைத்ததுண் டென்றுட் கொண்டு மழைமத யானை சேனை வரவினை மாற்றி மற்ற உழைவயப் புரவி மேல்நின் றிழிந்தனன் உலக மன்னன்.
| [37] |
மைத்தடங் குன்று போலும் மதக்களிற் றெதிரே யிந்த மெய்த்தவர் சென்ற போது வேறொன்றும் புகுதா விட்ட அத்தவ முடையேன் ஆனேன் அம்பல வாண ரன்பர் இத்தனை முனியக் கெட்டேன் என்கொலோ பிழையென் றஞ்சி.
| [38] |
செறிந்தவர் தம்மை நீக்கி அன்பர்முன் தொழுது சென்றீது அறிந்திலே னடியேன் அங்குக் கேட்டதொன் றதுதா னிற்க மறிந்தஇக் களிற்றின் குற்றம் பாகரோ டிதனை மாள எறிந்ததே போது மோதான் அருள்செயு மென்று நின்றார்.
| [39] |
மன்னவன் தன்னை நோக்கி வானவர் ஈசர் நேசர் சென்னியித் துங்க வேழஞ் சிவகாமி யாண்டார் கொய்து பன்னகா பரணர்ச் சாத்தக் கொடுவரும் பள்ளித் தாமம் தன்னைமுன் பறித்துச் சிந்தத் தரைப்படத் துணித்து வீழ்த்தேன்.
| [40] |
மாதங்கந் தீங்கு செய்ய வருபரிக் காரர் தாமும் மீதங்குக் கடாவு வாரும் விலக்கிடா தொழிந்து பட்டார் ஈதிங்கு நிகழ்ந்த தென்றார் எறிபத்த ரென்ன அஞ்சிப் பாதங்கள் முறையால் தாழ்ந்து பருவரைத் தடந்தோள் மன்னன்.
| [41] |
அங்கண ரடியார் தம்மைச் செய்தஇவ் அபரா தத்துக் கிங்கிது தன்னாற் போதா தென்னையுங் கொல்லவேண்டும் மங்கல மழுவாற் கொல்கை வழக்குமன் றிதுவா மென்று செங்கையா லுடைவாள் வாங்கிக் கொடுத்தனர் தீர்வு நேர்வார்.
| [42] |
வெந்தழற் சுடர்வாள் நீட்டும் வேந்தனை நோக்கிக் கெட்டேன் அந்தமில் புகழான் அன்புக் களவின்மை கண்டே னென்று தந்தவாள் வாங்க மாட்டார் தன்னைத்தான் துறக்கு மென்று சிந்தையால் உணர்வுற் றஞ்சி வாங்கினார் தீங்கு தீர்ப்பார்.
| [43] |
வாங்கிய தொண்டர் முன்பு மன்னனார் தொழுது நின்றே ஈங்கெனை வாளி னாற்கொன் றென்பிழை தீர்க்க வேண்டி ஓங்கிய உதவி செய்யப் பெற்றனன் இவர்பா லென்றே ஆங்கவர் உரைப்பக் கண்ட எறிபத்தர் அதனுக் கஞ்சி.
| [44] |
வன்பெருங் களிறு பாகர் மடியவும் உடைவா ளைத்தந் தென்பெரும் பிழையி னாலே யென்னையுங் கொல்லு மென்னும் அன்பனார் தம்மைத் தீங்கு நினைந்தன னென்று கொண்டு முன்பென துயிர்செ குத்து முடிப்பதே முடிவென் றெண்ணி.
| [45] |
புரிந்தவர் கொடுத்த வாளை அன்பர்தங் கழுத்தில் பூட்டி அரிந்திட லுற்ற போதில் அரசனும் பெரியோர் செய்கை இருந்தவா றிதுவென் கெட்டேன் என்றெதிர் கடிதிற் சென்று பெருந்தடந் தோளாற் கூடிப் பிடித்தனன் வாளுங் கையும்.
| [46] |
வளவனார் விடாது பற்ற மாதவர் வருந்தி நிற்ப அளவிலாப் பரிவில் வந்த இடுக்கணை யகற்ற வேண்டிக் களமணி களத்துச் செய்ய கண்ணுதல் அருளால் வாக்குக் கிளரொளி விசும்பின் மேல்வந் தெழுந்தது பலருங் கேட்ப.
| [47] |
தொழுந்தகை யன்பின் மிக்கீர் தொண்டினை மண்மேற் காட்டச் செழுந்திரு மலரை யின்று சினக்கரி சிந்தத் திங்கள் கொழுந்தணி வேணிக் கூத்தர் அருளினால் கூடிற் றென்றங் கெழுந்தது பாக ரோடும் யானையும் எழுந்த தன்றே.
| [48] |
ஈரவே பூட்டும் வாள்விட் டெறிபத்தர் தாமும் அந்த நேரியர் பெருமான் தாள்மேல் விழுந்தனர் நிருபர் கோனும் போர்வடி வாளைப் போக எறிந்துஅவர் கழல்கள் போற்றிப் பார்மிசை பணிந்தார் விண்ணோர் பனிமலர் மாரி தூர்த்தார்.
| [49] |
இருவரும் எழுந்து வானில் எழுந்தபே ரொலியைப் போற்ற அருமறைப் பொருளாய் உள்ளார் அணிகொள்பூங் கூடை தன்னில் மருவிய பள்ளித் தாம நிறைந்திட அருள மற்றத் திருவருள் கண்டு வாழ்ந்து சிவகாமியாரும் நின்றார்.
| [50] |
மட்டவிழ் அலங்கல் வென்றி மன்னவர் பெருமான் முன்னர் உட்டரு களிப்பி னோடும் உறங்கிய தெழுந்த தொத்து முட்டவெங் கடங்கள் பாய்ந்து முகிலென முழங்கிப் பொங்கும் பட்டவர்த் தனத்தைக் கொண்டு பாகரும் அணைய வந்தார்.
| [51] |
ஆனசீர்த் தொண்டர் கும்பிட் டடியனேன் களிப்ப இந்த மானவெங் களிற்றில் ஏறி மகிழ்ந்தெழுந் தருளும் என்ன மேன்மையப் பணிமேற் கொண்டு வணங்கிவெண் குடையின் நீழல் யானைமேல் கொண்டு சென்றார் இவுளிமேல் கொண்டு வந்தார்.
| [52] |
அந்நிலை எழுந்த சேனை ஆர்கலி ஏழு மொன்றாய் மன்னிய ஒலியின் ஆர்ப்ப மண்ணெலாம் மகிழ்ந்து வாழ்த்தப் பொன்னெடும் பொதுவில் ஆடல் நீடிய புனிதர் பொற்றாள் சென்னியிற் கொண்டு சென்னி திருவளர் கோயில் புக்கான்.
| [53] |
தம்பிரான் பணிமேற் கொண்டு சிவகாமி யாருஞ் சார எம்பிரான் அன்ப ரான எறிபத்தர் தாமும் என்னே அம்பலம் நிறைந்தார் தொண்டர் அறிவதற் கரியார் என்று செம்பியன் பெருமை உன்னித் திருப்பணி நோக்கிச் சென்றார்.
| [54] |
மற்றவர் இனைய தான வன்பெருந் தொண்டு மண்மேல் உற்றிடத் தடியார் முன்சென் றுதவியே நாளும் நாளும் நற்றவக் கொள்கை தாங்கி நலமிகு கயிலை வெற்பில் கொற்றவர் கணத்தின் முன்னாம் கோமுதல் தலைமை பெற்றார்.
| [55] |
ஆளுடைத் தொண்டர் செய்த ஆண்மையுந் தம்மைக் கொல்ல வாளினைக் கொடுத்து நின்ற வளவனார் பெருமை தானும் நாளுமற் றவர்க்கு நல்கும் நம்பர்தாம் அளக்கி லன்றி நீளுமித் தொண்டின் நீர்மை நினைக்கில்ஆர் அளக்க வல்லார்.
| [56] |
தேனாருந் தண்பூங் கொன்றைச் செஞ்சடை யவர்பொற் றாளில் ஆனாத காதல் அன்பர் எறிபத்த ரடிகள் சூடி வானாளுந் தேவர் போற்றும் மன்றுளார் நீறு போற்றும் ஏனாதி நாதர் செய்த திருத்தொழி லியம்ப லுற்றேன்.
| [57] |
Back to Top
12.090 ஏனாதிநாத நாயனார் புராணம்
புண்டரிகம் பொன்வரைமேல் ஏற்றிப் புவியளிக்கும் தண்தரள வெண்கவிகைத் தார்வளவர் சோணாட்டில் வண்டறைபூஞ் சோலைவயல் மருதத் தண்பணைசூழ்ந் தெண்திசையும் ஏறியசீர் எயின்மூதூர் எயினனூர்.
| [1] |
வேழக் கரும்பினொடு மென்கரும்பு தண்வயலில் தாழக் கதிர்ச்சாலி தானோங்குந் தன்மையவாய் வாழக் குடிதழைத்து மன்னியஅப் பொற்பதியில் ஈழக் குலச்சான்றார் ஏனாதி நாதனார்.
| [2] |
தொன்மைத் திருநீற்றுத் தொண்டின் வழிபாட்டின் நன்மைக்கண் நின்ற நலமென்றும் குன்றாதார் மன்னர்க்கு வென்றி வடிவாள் படைபயிற்றும் தன்மைத் தொழில் விஞ்சையில்தலைமை சார்ந்துள்ளார்.
| [3] |
வாளின் படைபயிற்றி வந்த வளமெல்லாம் நாளும் பெருவிருப்பால் நண்ணும் கடப்பாட்டில் தாளும் தடமுடியும் காணாதார் தம்மையுந்தொண் டாளும் பெருமான் அடித்தொண்டர்க் காக்குவார்.
| [4] |
நள்ளார் களும்போற்றும் நன்மைத் துறையின்கண் எள்ளாத செய்கை இயல்பின் ஒழுகுநாள் தள்ளாத தங்கள் தொழிலுரிமைத் தாயத்தின் உள்ளான் அதிசூரன் என்பான் உளனானான்.
| [5] |
மற்றவனும் கொற்ற வடிவாட் படைத்தொழில்கள் கற்றவர்கள் தன்னில் கடந்துள்ளார் இல்லையெனும் பெற்றிமையால் மாநிலத்து மிக்க பெருமிதம்வந் துற்றுலகில் தன்னையே சால மதித்துள்ளான்.
| [6] |
தானாள் விருத்திகெடத் தங்கள்குலத் தாயத்தின் ஆனாத செய்தொழிலாம் ஆசிரியத் தன்மைவளம் மேனாளுந் தான்குறைந்து மற்றவர்க்கே மேம்படலால் ஏனாதி நாதர்திறத் தேலா இகல்புரிந்தான்.
| [7] |
கதிரோன் எழமழுங்கிக் கால்சாயுங் காலை மதிபோல் அழிந்துபொறா மற்றவனும் சுற்றப் பதியோ ருடன்கூடப் பண்ணியமர் மேற்சென் றெதிர்போர் விளைப்பதற்கே எண்ணித் துணிந்தெழுந்தான்.
| [8] |
தோள்கொண்ட வல்லாண்மைச் சுற்றத் தொடுந்துணையாம் கோள்கொண்ட போர்மள்ளர் கூட்டத் தொடும்சென்று வாள்கொண்ட தாயம் வலியாரே கொள்வதென மூள்கின்ற செற்றத்தால் முன்கடையில் நின்றழைத்தான்.
| [9] |
வெங்கட் புலிகிடந்த வெம்முழையிற் சென்றழைக்கும் பைங்கட் குறுநரியே போல்வான் படைகொண்டு பொங்கிப் புறஞ்சூழ்ந்து போர்குறித்து நேர்நின்றே அங்கட் கடைநின் றழைத்தா னொலிகேளா.
| [10] |
ஆர்கொல் பொரவழைத்தார் என்றரியேற் றிற்கிளர்ந்து சேர்வு பெறக்கச்சில் செறிந்தவுடை மேல்வீக்கி வார்கழலுங் கட்டி வடிவாள் பலகைகொடு போர்முனையில் ஏனாதி நாதர் புறப்பட்டார்.
| [11] |
புறப்பட்ட போதின்கண் போர்த்தொழில்வாள் கற்கும் விறற்பெருஞ்சீர்க் காளையர்கள் வேறிடத்தி னின்றார் மறப்படைவாள் சுற்றத்தார் கேட்டோடி வந்து செறற்கரும்போர் வீரர்க் கிருமருங்குஞ் சேர்ந்தார்கள்.
| [12] |
வந்தழைத்த மாற்றான் வயப்புலிப்போத் தன்னார்முன் நந்தமது வாட்பயிற்று நற்றாயங் கொள்ளுங்கால் இந்தவெளி மேற்கை வகுத்திருவேம் பொருபடையும் சந்தித் தமர்விளைத்தால் சாயாதார் கொள்வதென.
| [13] |
என்றுபகைத் தோனுரைப்ப ஏனாதி நாதரது நன்றுனக்கு வேண்டுமேல் நண்ணுவன்என் றுள்மகிழ்ந்து சென்றவன்முன் சொன்ன செருக்களத்துப் போர்குறிப்பக் கன்றி யிருபடையும் கைவகுத்து நேர்மலைவார்.
| [14] |
மேக வொழுங்குகள் முன்கொடு மின்னிரை தம்மிடை யேகொடு மாக மருங்கினும் மண்ணினும் வல்லுரு மேறெதிர் செல்வன வாக நெடும்பல கைக்குல மாள்வினை வாளுடை யாடவர் காக மிடைந்த களத்திரு கைகளின் வந்து கலந்தனர்.
| [15] |
கால்கழல் கட்டிய மள்ளர்கள் கைகளின் மெய்க ளடக்கிய வாளொளி வட்ட முனைந்திட வந்திரு கைகளின் முந்தினர் வேலொடு வேலெதிர் நீள்வன மேவிய பாதலம் விட்டுயர் ஞாலமு றும்பணி வீரர்கள் நாநிமிர் கின்றன வொத்தன.
| [16] |
வெங்கண் விறற்சிலை வீரர்கள் வேறிரு கையிலும் நேர்பவர் தங்கள் சிலைக்குலம் உந்தின தாவில் சரங்கள் நெருங்குவ பொங்கு சினத்தெரி யிற்புகை போகு கொடிக்கள் வளைத்தெதிர் செங்கண் விழிக்கனல் சிந்திய சீறு பொறிச்செல வொத்தன.
| [17] |
வாளொடு நீள்கை துடித்தன மார்பொடு வேல்கள் குளித்தன தோளொடு வாளி நிலத்தன தோலொடு தோல்கள் தகைத்தன தாளொடு வார்கழ லிற்றன தாரொடு சூழ்சிர மற்றன நாளொடு சீறி மலைப்பவர் நாடிய போர்செய் களத்தினில்.
| [18] |
குருதியின் நதிகள் பரந்தன குறையுடல் ஓடி யலைந்தன பொருபடை அறுதுணி சிந்தின புடைசொரி குடருடல் பம்பின வெருவர எருவை நெருங்கின விசியறு துடிகள் புரண்டன இருபடை தனினும் எதிர்ந்தவர் எதிரெதிர் அமர்செய் பறந்தலை.
| [19] |
நீளிடை முடுகி நடந்தெதிர் நேரிரு வரில்ஒரு வன்றொடர் தாளிரு தொடையற முன்பெயர் சாரிகை முறைமை தடிந்தனன் வாளொடு விழுமுடல் வென்றவன் மார்பிடை அறமுன் எறிந்திட ஆளியி னவனு மறிந்தனன் ஆயினர் பலருள ரெங்கணும்.
| [20] |
கூர்முனை அயில்கொடு முட்டினர் கூடிமுன் உருவிய தட்டுடன் நேருரம் உருவ உரப்புடன் நேர்பட எதிரெதிர் குத்தினர் ஆருயிர் கழியவும் நிற்பவர் ஆண்மையில் இருவரும் ஒத்தமை போரடு படைகொ டளப்பவர் போல்பவர் அளவிலர் பட்டனர்.
| [21] |
பொற்சிலை வளைய வெதிர்ந்தவர் புற்றர வனைய சரம்பட விற்படை துணியவும் நின்றிலர் வெற்றிகொள் சுரிகை வழங்கினர் முற்றிய பெருவளன் இன்றியும் முற்படு கொடைநிலை நின்றிட உற்றன உதவிய பண்பினர் ஒத்தனர் உளர்சில கண்டர்கள்.
| [22] |
அடல்முனை மறவர் மடிந்தவர் அலர்முகம் உயிருள வென்றுறு படர்சிறை சுலவு கருங்கொடி படர்வன சுழல்வன துன்றலில் விடுசுடர் விழிக ளிரும்புசெய் வினைஞர்தம் உலையின் முகம்பொதி புடைமிடை கரியிடை பொங்கிய புகைவிடு தழலை நிகர்த்தன.
| [23] |
திண்படை வயவர் பிணம்படு செங்கள மதனிடை முன்சிலர் புண்படு வழிசொரி யுங்குடர் பொங்கிய கழுகு பருந்தொடு கொண்டெழு பொழுதினும் முன்செயல் குன்றுத லிலர்தலை நின்றனர் விண்படர் கொடிவிடு பண்பயில் விஞ்சையர் குமரரை வென்றனர்.
| [24] |
இம்முனைய வெம்போரில் இருபடையின் வாள்வீரர் வெம்முனையின் வீடியபின் வீடாது மிக்கொழிந்த தம்முடைய பல்படைஞர் பின்னாகத் தாமுன்பு தெம்முனையில் ஏனாதி நாதர் செயிர்த்தெழுந்தார்.
| [25] |
வெஞ்சினவாள் தீயுமிழ வீரக் கழல்கலிப்ப நஞ்சணிகண் டர்க்கன்பர் தாமெதிர்ந்த ஞாட்பின்கண் எஞ்சியெதிர் நின்ற இகல்முனையில் வேலுழவர் தஞ்சிரமும் தோளுரமும் தாளும் விழத்துணித்தார்.
| [26] |
தலைப்பட்டார் எல்லாரும் தனிவீரர் வாளில் கொலைப்பட்டார் முட்டாதார் கொல்களத்தை விட்டு நிலைப்பட்ட மெய்யுணர்வு நேர்பட்ட போதில் அலைப்பட்ட ஆர்வமுதல் குற்றம்போ லாயினார்.
| [27] |
இந்நிலைய வெங்களத்தில் ஏற்றழிந்த மானத்தால் தன்னுடைய பல்படைஞர் மீண்டார் தமைக்கொண்டு மின்னொளிவாள் வீசி விறல்வீரர் வெம்புலியே றன்னவர்தம் முன்சென் றதிசூரன் நேரடர்ந்தான்.
| [28] |
மற்றவர்தஞ் செய்கை வடிவாள் ஒளிகாணச் சுற்றிவரும் வட்டணையில் தோன்றா வகைகலந்து பற்றிஅடர்க் கும்பொழுதில் தானும் படைப்பிழைத்துப் பொற்றடந்தோள் வீரர்க் குடைந்து புறகிட்டான்.
| [29] |
போன அதிசூரன் போரி லவர்க்கழிந்த மானம்மிக மீதூர மண்படுவான் கண்படான் ஆனசெயல் ஓரிரவும் சிந்தித் தலமருவான் ஈனமிகு வஞ்சனையால் வெல்வனென எண்ணினான்.
| [30] |
சேட்டாருங் கங்குல் புலர்காலைத் தீயோனும் நாட்டாரைக் கொல்லாதே நாமிருவேம் வேறிடத்து வாட்டாயங் கொள்போர் மலைக்க வருகவெனத் தோட்டார்பூந் தாரார்க்குச் சொல்லி வரவிட்டான்.
| [31] |
இவ்வாறு கேட்டலுமே ஏனாதி நாதனார் அவ்வாறு செய்த லழகி தெனவமைந்து கைவாள் அமர்விளைக்கத் தான்கருதும் அக்களத்தே வெவ்வாள் உரவோன் வருகவென மேற்கொள்வார்.
| [32] |
சுற்றத்தார் யாரும் அறியா வகைசுடர்வாள் பொற்பலகை யுந்தாமே கொண்டு புறம்போந்து மற்றவன்முன் சொல்லி வரக்குறித்த அக்களத்தே பற்றலனை முன்வரவு பார்த்துத் தனிநின்றார்.
| [33] |
தீங்கு குறித்தழைத்த தீயோன் தீருநீறு தாங்கிய நெற்றியினார் தங்களையே எவ்விடத்தும் ஆங்கவருந் தீங்கிழையார் என்ப தறிந்தானாய்ப் பாங்கில் திருநீறு பண்டு பயிலாதான்.
| [34] |
வெண்ணீறு நெற்றி விரவப் புறம்பூசி உண்ணெஞ்சில் வஞ்சக் கறுப்பும் உடன்கொண்டு வண்ணச் சுடர்வாள் மணிப்பலகை கைக்கொண்டு புண்ணியப்போர் வீரர்க்குச் சொன்னவி டம்புகுந்தான்.
| [35] |
வென்றி மடங்கல் விடக்குவர முன்பார்த்து நின்றாற் போல்நின்றார் நிலைகண்டு தன்னெற்றி சென்று கிடைப்பளவும் திண்பலகை யால்மறைத்தே முன்தனிவீ ரர்க்கெதிரே மூண்டான் மறம்பூண்டான்.
| [36] |
அடல்விடையே றென்ன அடர்த்தவனைக் கொல்லும் இடைதெரிந்து தாள்பெயர்க்கும் ஏனாதி நாதர் புடைபெயர்ந்த மாற்றான் பலகை புறம்போக்கக் கடையவன்தன் நெற்றியின்மேல் வெண்ணீறு தாங்கண்டார்.
| [37] |
கண்டபொழு தேகெட்டேன் முன்பிவர்மேற் காணாத வெண்திருநீற் றின்பொலிவு மேற்கண்டேன் வேறினியென் அண்டர்பிரான் சீரடியார் ஆயினார் என்றுமனங் கொண்டிவர்தங் கொள்கைக் குறிவழிநிற் பேனென்று.
| [38] |
கைவா ளுடன்பலகை நீக்கக் கருதியது செய்யார் நிராயுதரைக் கொன்றா ரெனுந்தீமை எய்தாமை வேண்டும் இவர்க்கென் றிரும்பலகை நெய்வா ளுடனடர்த்து நேர்வார்போல் நேர்நின்றார்.
| [39] |
அந்நின்ற தொண்டர் திருவுள்ளம் ஆரறிவார் முன்னின்ற பாதகனும் தன்கருத்தே முற்றுவித்தான் இந்நின்ற தன்மை யறிவார் அவர்க்கருள மின்னின்ற செஞ்சடையார் தாமே வெளிநின்றார்.
| [40] |
மற்றினிநாம் போற்றுவதென் வானோர் பிரானருளைப் பற்றலர்தங் கைவாளால் பாசம் அறுத்தருளி உற்றவரை யென்றும் உடன்பிரியா அன்பருளிப் பொற்றொடியாள் பாகனார் பொன்னம் பலமணைந்தார்.
| [41] |
தம்பெருமான் சாத்தும் திருநீற்றுச் சார்புடைய எம்பெருமான் ஏனாதி நாதர் கழலிறைஞ்சி உம்பர்பிரான் காளத்தி உத்தமர்க்குக் கண்ணப்பும் நம்பெருமான் செய்தபணி நாம்தெரிந்த வாறுரைப்பாம்.
| [42] |
Back to Top
12.100 கண்ணப்ப நாயனார் புராணம்
மேவலர் புரங்கள் செற்ற விடையவர் வேத வாய்மைக் காவலர் திருக்கா ளத்திக் கண்ணப்பர் திருநா டென்பர் நாவலர் புகழ்ந்து போற்றும் நல்வளம் பெருகி நின்ற பூவலர் வாவி சோலை சூழ்ந்தபொத் தப்பி நாடு.
| [1] |
இத்திரு நாடு தன்னில் இவர்திருப் பதியா தென்னில் நித்தில அருவிச் சாரல் நீள்வரை சூழ்ந்த பாங்கர் மத்தவெங் களிற்றுக் கோட்டு வன்றொடர் வேலி கோலி ஒத்தபே ரரணஞ் சூழ்ந்த முதுபதி உடுப்பூர் ஆகும்.
| [2] |
குன்றவர் அதனில் வாழ்வார் கொடுஞ்செவி ஞமலி ஆர்த்த வன்றிரள் விளவின் கோட்டு வார்வலை மருங்கு தூங்கப் பன்றியும் புலியும் எண்கும் கடமையும் மானின் பார்வை அன்றியும் பாறை முன்றில் ஐவனம் உணங்கு மெங்கும்.
| [3] |
வன்புலிக் குருளை யோடும் வயக்கரிக் கன்றி னோடும் புன்தலைச் சிறும கார்கள் புரிந்துடன் ஆட லன்றி அன்புறு காதல் கூர அணையுமான் பிணைக ளோடும் இன்புற மருவி யாடும் எயிற்றியர் மகளி ரெங்கும்.
| [4] |
வெல்படைத் தறுகண் வெஞ்சொல் வேட்டுவர் கூட்டந் தோறும் கொல்எறி குத்தென் றார்த்துக் குழுமிய வோசை யன்றிச் சில்லரித் துடியுங் கொம்பும் சிறுகண்ஆ குளியுங் கூடிக் கல்லெனு மொலியின் மேலும் கறங்கிசை யருவி யெங்கும்.
| [5] |
ஆறலைத் துண்ணும் வேடர் அயற்புலங் கவர்ந்து கொண்ட வேறுபல் உருவின் மிக்கு விரவும்ஆன் நிரைக ளன்றி ஏறுடை வானந் தன்னில் இடிக்குரல் எழிலி யோடு மாறுகொள் முழக்கங் காட்டும் மதக்கைமா நிரைக ளெங்கும்.
| [6] |
மைச்செறிந் தனைய மேனி வன்தொழில் மறவர் தம்பால் அச்சமும் அருளும் என்றும் அடைவிலார் உடைவன் தோலார் பொச்சையி னறவும் ஊனின் புழுக்கலும் உணவு கொள்ளும் நச்சழற் பகழி வேடர்க் கதிபதி நாக னென்பான்.
| [7] |
பெற்றியால் தவமுன் செய்தான் ஆயினும் பிறப்பின் சார்பால் குற்றமே குணமா வாழ்வான் கொடுமையே தலைநின் றுள்ளான் விற்றொழில் விறலின் மிக்கான் வெஞ்சின மடங்கல் போல்வான் மற்றவன் குறிச்சி வாழ்க்கை மனைவியும் தத்தை யென்பாள்.
| [8] |
அரும்பெறல் மறவர் தாயத் தான்றதொல் குடியில் வந்தாள் இரும்புலி எயிற்றுத் தாலி இடையிடை மனவு கோத்துப் பெரும்புறம் அலையப் பூண்டாள் பீலியுங் குழையுந் தட்டச் சுரும்புறு படலை முச்சிச் சூரரிப் பிணவு போல்வாள்.
| [9] |
பொருவருஞ் சிறப்பின் மிக்கார் இவர்க்கினிப் புதல்வர்ப் பேறே அரியதென் றெவருங் கூற அதற்படு காத லாலே முருகலர் அலங்கற் செவ்வேல் முருகவேள் முன்றிற் சென்று பரவுதல் செய்து நாளும் பராய்க்கடன் நெறியில் நிற்பார்.
| [10] |
வாரணச் சேவ லோடும் வரிமயிற் குலங்கள் விட்டுத் தோரண மணிகள் தூக்கிச் சுரும்பணி கதம்பம் நாற்றிப் போரணி நெடுவே லோற்குப் புகழ்புரி குரவை தூங்கப் பேரணங் காடல் செய்து பெருவிழா எடுத்த பின்றை.
| [11] |
பயில்வடுப் பொலிந்த யாக்கை வேடர்தம் பதியாம் நாகற் கெயிலுடைப் புரங்கள் செற்ற எந்தையார் மைந்த ரான மயிலுடைக் கொற்ற வூர்தி வரையுரங் கிழித்த திண்மை அயிலுடைத் தடக்கை வென்றி அண்ணலார் அருளி னாலே.
| [12] |
கானவர் குலம்வி ளங்கத் தத்தைபால் கருப்பம் நீட ஊனமில் பலிகள் போக்கி உறுகடன் வெறியாட் டோடும் ஆனஅத் திங்கள் செல்ல அளவில்செய் தவத்தி னாலே பான்மதி உவரி ஈன்றால் எனமகப் பயந்த போது.
| [13] |
கரிப்பரு மருப்பின் முத்தும் கழைவிளை செழுநீர் முத்தும் பொருப்பினின் மணியும் வேடர் பொழிதரு மழையே யன்றி வரிச்சுரும் பலைய வானின் மலர்மழை பொழிந்த தெங்கும் அரிக்குறுந் துடியே யன்றி அமரர்துந் துபியும் ஆர்த்த.
| [14] |
அருவரைக் குறவர் தங்கள் அகன்குடிச் சீறூ ராயம் பெருவிழா எடுத்து மிக்க பெருங்களி கூருங் காலைக் கருவரை காள மேகம் ஏந்திய தென்னத் தாதை பொருவரைத் தோள்க ளாரப் புதல்வனை யெடுத்துக் கொண்டான்.
| [15] |
கருங்கதிர் விரிக்கு மேனிக் காமரு குழவி தானும் இரும்புலிப் பறழின் ஓங்கி இறவுள ரளவே யன்றி அரும்பெறல் உலகம் எல்லாம் அளப்பரும் பெருமை காட்டித் தருங்குறி பலவுஞ் சாற்றுந் தன்மையில் பொலிந்து தோன்ற.
| [16] |
அண்ணலைக் கையில் ஏந்தற் கருமையால் உரிமைப் பேரும் திண்ணன்என் றியம்பும் என்னத் திண்சிலை வேட ரார்த்தார் புண்ணியப் பொருளா யுள்ள பொருவில்சீர் உருவி னானைக் கண்ணினுக் கணியாத் தங்கள் கலன்பல வணிந்தா ரன்றே.
| [17] |
வரையுறை கடவுட் காப்பும் மறக்குடி மரபில் தங்கள் புரையில்தொல் முறைமைக் கேற்ப பொருந்துவ போற்றிச் செய்து விரையிளந் தளிருஞ் சூட்டி வேம்பிழைத் திடையே கோத்த அரைமணிக் கவடி கட்டி அழகுற வளர்க்கும் நாளில்.
| [18] |
வருமுறைப் பருவந் தோறும் வளமிகு சிறப்பில் தெய்வப் பெருமடை கொடுத்துத் தொக்க பெருவிறல் வேடர்க் கெல்லாம் திருமலி துழனி பொங்கச் செழுங்களி மகிழ்ச்சி செய்தே அருமையிற் புதல்வர்ப் பெற்ற ஆர்வமுந் தோன்ற உய்த்தார்.
| [19] |
ஆண்டெதிர் அணைந்து செல்ல இடும்அடித் தளர்வு நீங்கிப் பூண்திகழ் சிறுபுன் குஞ்சிப் புலியுகிர்ச் சுட்டி சாத்தி மூண்டெழு சினத்துச் செங்கண் முளவுமுள் அரிந்து கோத்த நாண்தரும் எயிற்றுத் தாலி நலங்கிளர் மார்பில் தூங்க.
| [20] |
பாசொளி மணியோ டார்த்த பன்மணிச் சதங்கை ஏங்கக் காசொடு தொடுத்த காப்புக் கலன்புனை அரைஞாண் சேர்த்தித் தேசுடை மருப்பில் தண்டை செறிமணிக் குதம்பை மின்ன மாசறு கோலங் காட்டி மறுகிடை யாடும் நாளில்.
| [21] |
தண்மலர் அலங்கல் தாதை தாய்மனங் களிப்ப வந்து புண்ணிய கங்கை நீரில் புனிதமாந் திருவாய் நீரில் உண்ணனைந் தமுதம் ஊறி ஒழுகிய மழலைத் தீஞ்சொல் வண்ணமென் பவளச் செவ்வாய் குதட்டியே வளரா நின்றார்.
| [22] |
பொருபுலிப் பார்வைப் பேழ்வாய் முழையெனப் பொற்கை நீட்டப் பரிவுடைத் தந்தை கண்டு பைந்தழை கைக்கொண் டோச்ச இருசுடர்க் குறுகண் தீர்க்கும் எழில்வளர் கண்ணீர் மல்கி வருதுளி முத்தம் அத்தாய் வாய்முத்தங் கொள்ள மாற்றி.
| [23] |
துடிக்குற டுருட்டி யோடித் தொடக்குநாய்ப் பாசஞ் சுற்றிப் பிடித்தறுத் தெயினப் பிள்ளைப் பேதையர் இழைத்த வண்டல் அடிச்சிறு தளிராற் சிந்தி அருகுறு சிறுவ ரோடும் குடிச்சிறு குரம்பை யெங்கும் குறுநடைக் குறும்பு செய்து.
| [24] |
அனையன பலவும் செய்தே ஐந்தின்மே லான ஆண்டில் வனைதரு வடிவார் கண்ணி மறச்சிறு மைந்த ரோடும் சினைமலர்க் காவு ளாடிச் செறிகுடிக் குறிச்சி சூழ்ந்த புனைமருப் புழலை வேலிப் புறச்சிறு கானிற் போகி.
| [25] |
கடுமுயற் பறழி னோடும் கானஏ னத்தின் குட்டி கொடுவரிக் குருளை செந்நாய் கொடுஞ்செவிச் சாப மான முடுகிய விசையி லோடித் தொடர்ந்துடன் பற்றி முற்றத் திடுமரத் தாளிற் கட்டி வளர்ப்பன எண்ணி லாத.
| [26] |
அலர்பகல் கழிந்த அந்தி ஐயவிப் புகையு மாட்டிக் குலமுது குறத்தி யூட்டிக் கொண்டுகண் துயிற்றிக் கங்குல் புலரஊன் உணவு நல்கிப் புரிவிளை யாட்டின் விட்டுச் சிலமுறை யாண்டு செல்லச் சிலைபயில் பருவஞ் சேர்ந்தார்.
| [27] |
தந்தையும் மைந்த னாரை நோக்கித்தன் தடித்த தோளால் சிந்தையுள் மகிழப் புல்லிச் சிலைத்தொழில் பயிற்ற வேண்டி முந்தையத் துறையின் மிக்க முதியரை அழைத்துக் கூட்டி வந்தநாட் குறித்த தெல்லாம் மறவர்க்குச் சொல்லி விட்டான்.
| [28] |
வேடர்தங் கோமான் நாகன் வென்றிவேள் அருளாற் பெற்ற சேடரின் மிக்க செய்கைத் திண்ணன்விற் பிடிக்கின் றான்என் றாடியல் துடியுஞ் சாற்றி யறைந்தபே ரோசை கேட்டு மாடுயர் மலைக ளாளும் மறக்குலத் தலைவ ரெல்லாம்.
| [29] |
மலைபடு மணியும் பொன்னும் தரளமும் வரியின் தோலும் கொலைபுரி களிற்றின் கோடும் பீலியின் குவையும் தேனும் தொலைவில்பல் நறவும் ஊனும் பலங்களுங் கிழங்குந் துன்றச் சிலையுடை வேடர் கொண்டு திசைதொறும் நெருங்க வந்தார்.
| [30] |
மல்கிய வளங்கள் எல்லாம் நிறைந்திட மாறில் சீறூர் எல்லையில் அடங்கா வண்ணம் ஈண்டினர் கொணர்ந்தா ரெங்கும் பல்பெருங் கிளைஞர் போற்றப் பராய்க்கடன் பலவும் நேர்ந்து வில்விழா எடுக்க வென்று விளம்பினன் வேடர் கோமான்.
| [31] |
பான்மையில் சமைத்துக் கொண்டு படைக்கலம் வினைஞர் ஏந்தத் தேனலர் கொன்றை யார்தம் திருச்சிலைச் செம்பொன் மேரு வானது கடலின் நஞ்சம் ஆக்கிட அவர்க்கே பின்னும் கானஊன் அமுத மாக்கும் சிலையினைக் காப்புச் சேர்த்தார்.
| [32] |
சிலையினைக் காப்புக் கட்டும் திண்புலி நரம்பிற் செய்த நலமிகு காப்பு நன்னாள் நாகனார் பயந்த நாகர் குலம்விளங் கரிய குன்றின் கோலமுன் கையிற் சேர்த்தி மலையுறை மாக்க ளெல்லாம் வாழ்த்தெடுத் தியம்பி னார்கள்.
| [33] |
ஐவன அடிசில் வெவ்வே றமைத்தன புற்பாற் சொன்றி மொய்வரைத் தினைமென் சோறு மூங்கில்வன் பதங்கள் மற்றும் கைவினை எயின ராக்கிக் கலந்தவூன் கிழங்கு துன்றச் செய்வரை யுயர்ப்ப வெங்கும் கலந்தனர் சினவில் வேடர்.
| [34] |
செந்தினை இடியும் தேனும் அருந்துவார் தேனில் தோய்த்து வெந்தஊன் அயில்வார் வேரி விளங்கனிக் கவளம் கொள்வார் நந்திய ஈயல் உண்டி நசையொடும் மிசைவார் வெவ்வே றந்தமி லுணவின் மேலோர் ஆயினர் அளவி லார்கள்.
| [35] |
அயல்வரைப் புலத்தின் வந்தார் அருங்குடி யிருப்பின் உள்ளார் இயல்வகை உணவி லார்ந்த எயிற்றியர் எயின ரெல்லாம் உயர்கதி ருச்சி நீங்க ஒழிவில்பல் நறவு மாந்தி மயலுறு களிப்பின் நீடி வரிசிலை விழவு கொள்வார்.
| [36] |
பாசிலைப் படலை சுற்றிப் பன்மலர்த் தொடையல் சூடிக் காசுடை வடத்தோல் கட்டிக் கவடிமெய்க் கலன்கள் பூண்டு மாசில்சீர் வெட்சி முன்னா வருந்துறைக் கண்ணி சூடி ஆசில்ஆ சிரியன் ஏந்தும் அடற்சிலை மருங்கு சூழ்ந்தார்.
| [37] |
தொண்டக முரசும் கொம்பும் துடிகளுந் துளைகொள் வேயும் எண்திசை நிறைந்து விம்ம எழுந்தபே ரொலியி னோடும் திண்திறல் மறவ ரார்ப்புச் சேண்விசும் பிடித்துச் செல்லக் கொண்டசீர் விழவு பொங்கக் குறிச்சியை வலங்கொண் டார்கள்.
| [38] |
குன்றவர் களிகொண் டாடக் கொடிச்சியர் துணங்கை யாடத் துன்றிய மகிழ்ச்சி யோடும் சூரர மகளி ராட வென்றிவில் விழவி னோடும் விருப்புடை ஏழாம் நாளின் அன்றிரு மடங்கு செய்கை அழகுற அமைத்த பின்றை.
| [39] |
வெங்கதிர் விசும்பின் உச்சி மேவிய பொழுதில் எங்கும் மங்கல வாழ்த்து மல்க மருங்குபல் லியங்க ளார்ப்பத் தங்கள்தொல் மரபின் விஞ்சைத் தனுத்தொழில் வலவர் தம்பால் பொங்கொளிக் கரும்போர் ஏற்றைப் பொருசிலை பிடிப்பித் தார்கள்.
| [40] |
பொற்றட வரையின் பாங்கர்ப் புரிவுறு கடன்முன் செய்த விற்றொழிற் களத்தில் நண்ணி விதிமுறை வணங்கி மேவும் அற்றைநாள் தொடங்கி நாளும் அடற்சிலை யாண்மை முற்றக் கற்றன ரென்னை யாளும் கானவர்க் கரிய சிங்கம்.
| [41] |
வண்ணவெம் சிலையு மற்றப் படைகளும் மலரக் கற்றுக் கண்ணகன் சாயல் பொங்கக் கலைவளர் திங்க ளேபோல் எண்ணிரண் டாண்டின் செவ்வி எய்தினார் எல்லை யில்லாப் புண்ணியந் தோன்றி மேன்மேல் வளர்வதன் பொலிவு போல்வார்.
| [42] |
இவ்வண்ணந் திண்ணனார் நிரம்பு நாளில் இருங்குறவர் பெருங்குறிச்சிக் கிறைவ னாய மைவண்ண வரைநெடுந்தோள் நாகன் தானும் மலையெங்கும் வனமெங்கும் வரம்பில் காலம் கைவண்ணச் சிலைவேட்டை யாடித் தெவ்வர் கணநிரைகள் பலகவர்ந்து கானங் காத்து மெய்வண்ணந் தளர்மூப்பின் பருவ மெய்தி வில்லுழவின் பெருமுயற்சி மெலிவா னானான்.
| [43] |
அங்கண்மலைத் தடஞ்சாரற் புனங்க ளெங்கும் அடலேனம் புலிகரடி கடமை ஆமா வெங்கண்மரை கலையொடுமான் முதலா யுள்ள மிருகங்கள் மிகநெருங்கி மீதூர் காலைத் திங்கள்முறை வேட்டைவினை தாழ்த்ததென்று சிலைவேடர் தாமெல்லாம திரண்டு சென்று தங்கள்குல முதற்றலைவ னாகி யுள்ள தண்தெரியல் நாகன்பால் சார்ந்து சொன்னார்.
| [44] |
சொன்னவுரை கேட்டலுமே நாகன் தானும் சூழ்ந்துவருந் தன்மூப்பின் தொடர்வு நோக்கி முன்னவர்கட் குரைசெய்வான் மூப்பி னாலே முன்புபோல் வேட்டையினின் முயல கில்லேன் என்மகனை உங்களுக்கு நாத னாக எல்லீருங் கைக்கொண்மி னென்ற போதில் அன்னவரு மிரங்கிப்பின் மகிழ்ந்து தங்கோன் அடிவணங்கி இம்மாற்றம் அறைகின் றார்கள்.
| [45] |
இத்தனைகா லமும்நினது சிலைக்கீழ்த் தங்கி இனிதுண்டு தீங்கின்றி இருந்தோம் இன்னும் அத்தநின தருள்வழியே நிற்ப தல்லால் அடுத்தநெறி வேறுளதோ அதுவே யன்றி மெய்த்தவிறல் திண்ணனைஉன் மரபில் சால மேம்படவே பெற்றளித்தாய் விளங்கு மேன்மை வைத்தசிலை மைந்தனைஈண் டழைத்து நுங்கள் வரையாட்சி யருளென்றார் மகிழ்ந்து வேடர்.
| [46] |
சிலைமறவ ருரைசெய்ய நாகன் தானும் திண்ணனைமுன் கொண்டுவரச் செப்பி விட்டு மலைமருவு நெடுங்கானிற் கன்னி வேட்டை மகன்போகக் காடுபலி மகிழ வூட்டத் தலைமரபின் வழிவந்த தேவ ராட்டி தனையழைமின் என அங்குச் சார்ந்தோர் சென்று நிலைமையவள் தனக்குரைப்ப நரைமூ தாட்டி நெடிதுவந்து விருப்பினொடுங் கடிது வந்தாள்.
| [47] |
கானில்வரித் தளிர்துதைந்த கண்ணி சூடிக் கலைமருப்பின் அரிந்த குழை காதிற் பெய்து மானின்வயிற் றரிதாரத் திலக மிட்டு மயிற் கழுத்து மனவுமணி வடமும் பூண்டு தானிழிந்து திரங்கிமுலை சரிந்து தாழத் தழைப்பீலி மரவுரிமேற் சார வெய்திப் பூநெருங்கு தோரைமல சேடை நல்கிப் போர்வேடர் கோமானைப் போற்றி நின்றாள்.
| [48] |
நின்றமுது குறக்கோலப் படிமத் தாளை நேர்நோக்கி அன்னைந நிரப்பு நீங்கி நன்றினிதி னிருந்தனையோ என்று கூறும் நாக னெதிர் நலம்பெருக வாழ்த்தி நல்ல மென்தசையும் ஈயலொடு நறவும் வெற்பில் விளைவளனும் பிறவளனும் வேண்டிற் றெல்லாம் அன்றுநீ வைத்தபடி பெற்று வாழ்வேன் அழைத்தபணி என்னென்றாள் அணங்கு சார்ந்தாள்.
| [49] |
கோட்டமில்என் குலமைந்தன் திண்ணன் எங்கள் குலத்தலைமை யான்கொடுப்பக் கொண்டு பூண்டு பூட்டுறுவெஞ் சிலைவேடர் தம்மைக் காக்கும் பொருப்புரிமை புகுகின்றான் அவனுக் கென்றும் வேட்டைவினை யெனக்குமே லாக வாய்த்து வேறுபுலங் கவர்வென்றி மேவு மாறு காட்டிலுறை தெய்வங்கள் விரும்பி உண்ணக் காடுபலி ஊட்டென்றான் கவலை யில்லான்.
| [50] |
மற்றவன்தன் மொழிகேட்ட வரைச்சூ ராட்டி மனமகிழ்ந்திங் கன்போடு வருகின் றேனுக் கெற்றையினுங் குறிகள்மிக நல்ல வான இதனாலே உன்மைந்தன் திண்ண னான வெற்றிவரிச் சிலையோன்நின் அளவி லன்றி மேம்படுகின் றான்என்று விரும்பி வாழ்த்திக் கொற்றவன தெய்வங்கள் மகிழ வூட்ட வேண்டுவன குறைவின்றிக் கொண்டு போனாள்.
| [51] |
தெய்வநிகழ் குறமுதியாள் சென்ற பின்பு திண்ணனார் சிலைத்தாதை அழைப்பச்சீர்கொள் மைவிரவு நறுங்குஞ்சி வாசக கண்ணி மணிநீல மலையொன்று வந்த தென்னக் கைவிரவு சிலைவேடர் போற்ற வந்து காதல்புரி தாதைகழல் வணங்கும் போதில் செவ்வரைபோல் புயமிரண்டுஞ் செறியப் புல்லிச் செழும்புலித்தோ லிருக்கையின்முன் சேர வைத்தான்.
| [52] |
முன்னிருந்த மைந்தன்முகம் நோக்கி நாகன் மூப்பெனைவந் தடைதலினால் முன்பு போல என்னுடைய முயற்சியினால் வேட்டை யாட இனிஎனக்குக் கருத்தில்லை எனக்கு மேலாய் மன்னுசிலை மலையர்குலக் காவல் பூண்டு மாறெறிந்து மாவேட்டை யாடி என்றும் உன்னுடைய மரபுரிமை தாங்கு வாயென் றுடைதோலும் சுரிகையுங்கைக் கொடுத்தா னன்றே.
| [53] |
தந்தைநிலை உட்கொண்டு தளர்வு கொண்டு தங்கள்குலத் தலைமைக்குச் சார்வு தோன்ற வந்தகுறை பாடதனை நிரப்பு மாறு மனங்கொண்ட குறிப்பினால் மறாமை கொண்டு முந்தையவன் கழல்வணங்கி முறைமை தந்த முதற்சுரிகை உடைதோலும் வாங்கிக் கொண்டு சிந்தைபரங் கொளநின்ற திண்ண னார்க்குத் திருத்தாதை முகமலர்ந்து செப்பு கின்றான்.
| [54] |
நம்முடைய குலமறவர் சுற்றத் தாரை நான்கொண்டு பரித்த தன்மேல் நலமே செய்து தெம்முனையி லயற்புலங்கள் கவர்ந்து கொண்டு திண்சிலையின் வளமொழியாச் சிறப்பின் வாழ்வாய் வெம்முனையின் வேட்டைகளும் உனக்கு வாய்க்கும் விரைந்துநீ தாழாதே வேட்டை யாட இம்முரண்வெஞ் சிலைவேடர் தங்க ளோடும் எழுகவென விடைகொடுத்தான் இயல்பில் நின்றான்.
| [55] |
செங்கண்வயக் கோளரியே றன்ன திண்மைத் திண்ணனார் செய்தவத்தின் பெருமை பெற்ற வெங்கண்விறல் தாதைகழல் வணங்கி நின்று விடைகொண்டு புறம்போந்து வேட ரோடும் மங்கலநீர்ச் சுனைபடிந்து மனையின் வைகி வைகிருளின் புலர்காலை வரிவிற் சாலைப் பொங்குசிலை அடல்வேட்டைக் கோலங் கொள்ளப் புனைதொழிற்கை வினைஞருடன் பொலிந்து புக்கார்.
| [56] |
நெறிகொண்ட குஞ்சிச் சுருள்துஞ்சி நிமிர்ந்து பொங்க முறிகொண்ட கண்ணிக்கிடை மொய்யொளிப் பீலி சேர்த்தி வெறிகொண்ட முல்லைப் பிணைமீது குறிஞ்சி வெட்சி செறிகொண்ட வண்டின்குலம் சீர்கொளப் பின்பு செய்து.
| [57] |
முன்னெற்றி யின்மீது முருந்திடை வைத்த குன்றி தன்னிற்புரி கொண்ட மயிர்க்கயி றாரச் சாத்தி மின்னிற்றிகழ் சங்கு விளங்குவெண் டோடு காதின் மன்னிப்புடை நின்றன மாமதி போல வைக.
| [58] |
கண்டத்திடை வெண்கவ டிக்கதிர் மாலை சேரக் கொண்டக்கொடு பன்மணி கோத்திடை ஏனக் கோடு துண் டப்பிறை போல்வன தூங்கிட வேங்கை வன்தோல் தண்டைச்செயல் பொங்கிய சன்னவீ ரந்த யங்க.
| [59] |
மார்பிற்சிறு தந்த மணித்திரள் மாலை தாழத் தாரிற்பொலி தோள்வல யங்கள் தழைத்து மின்னச் சேர்விற்பொலி கங்கண மீது திகழ்ந்த முன்கைக் கார்விற்செறி நாணெறி கைச்செறி கட்டி கட்டி.
| [60] |
அரையிற்சர ணத்துரி யாடையின் மீது பௌவத் திரையிற்படு வெள்ளல கார்த்து விளிம்பு சேர்த்தி நிரையிற்பொலி நீளுடை தோல்சுரி கைப்பு றஞ்சூழ் விரையிற்றுவர் வார்விசி போக்கி அமைத்து வீக்கி.
| [61] |
வீரக்கழல் காலின் விளங்க அணிந்து பாதம் சேரத்தொடு நீடு செருப்பு விருப்பு வாய்ப்பப் பாரப்பெரு வில்வலங் கொண்டு பணிந்து திண்ணன் சாரத்திருத் தாள்மடித் தேற்றி வியந்து தாங்கி.
| [62] |
அங்கப்பொழு திற்புவ னத்திடர் வாங்க ஓங்கித் துங்கப்பெரு மாமழை போன்று துண்ணென் றொலிப்ப வெங்கட்சின நீடு விலங்கு விலங்கி நீங்கச் செங்கைத்தலத் தால்தட விச்சிறு நாண்எ றிந்தார்.
| [63] |
பல்வேறு வாளிபுதை பார்த்துடன் போத ஏவி வில்வேட ராயத் துடிமேவி ஒலிக்கு முன்றில் சொல்வேறு வாழ்த்துத் திசைதோறுந் துதைந்து விம்ம வல்லேறு போல்வார் அடல்வாளி தெரிந்து நின்றார்.
| [64] |
மானச்சிலை வேடர் மருங்கு நெருங்கு போதில் பானற்குல மாமல ரிற்படர் சோதி யார்முன் தேனற்றசை தேறல் சருப்பொரி மற்று முள்ள கானப்பலி நேர்கட வுட்பொறை யாட்டி வந்தாள்.
| [65] |
நின்றெங்கு மொய்க்குஞ்சிலை வேடர்கள் நீங்கப் புக்குச் சென்றங்கு வள்ளல்திரு நெற்றியிற் சேடை சாத்தி உன்தந்தை தந்தைக்கும் இந்நன்மை கள்உள்ள வல்ல நன்றும்பெரி துன்விறல் நம்மள வன்றி தென்றாள்.
| [66] |
அப்பெற்றியில் வாழ்த்தும் அணங்குடை யாட்டி தன்னைச் செப்பற்கரி தாய சிறப்பெதிர் செய்து போக்கிக் கைப்பற்றிய திண்சிலைக் கார்மழை மேக மென்ன மெய்ப்பொற்புடை வேட்டை யின்மேற்கொண் டெழுந்து போந்தார்.
| [67] |
தாளில்வாழ் செருப்பர்தோல் தழைத்தநீடு தானையார் வாளியோடு சாபம்மேவு கையர்வெய்ய வன்கணார் ஆளியேறு போலஏகும் அன்ணலார்முன் எண்ணிலார் மீளிவேடர் நீடுகூட்டம் மிக்குமேல் எழுந்ததே.
| [68] |
வன்தொடர்ப்பி ணித்தபாசம் வன்கைமள்ளர் கொள்ளவே வென்றிமங்கை வேடர்வில்லின் மீதுமேவு பாதமுன் சென்றுநீளு மாறுபோல்வ செய்யநாவின் வாயவாய் ஒன்றொடொன்று நேர்படாமல் ஓடுநாய்கள் மாடெலாம்.
| [69] |
போர்வலைச் சிலைத்தொழிற் புறத்திலே விளைப்பவச் சார்வலைத் தொடக்கறுக்க ஏகும்ஐயர் தம்முனே கார்வலைப் படுத்தகுன்று கானமா வளைக்கநீள் வார்வலைத் திறஞ்சுமந்து வந்தவெற்பர் முந்தினார்.
| [70] |
நண்ணிமாம றைக்குலங்கள் நாடவென்று நீடுமத் தண்ணிலா அடம்புகொன்றை தங்குவேணி யார்தமைக் கண்ணினீடு பார்வையொன்று கொண்டு காணும் அன்பர்முன் எண்ணில்பார்வை கொண்டுவேடர் எம்மருங்கும் ஏகினார்.
| [71] |
கோடுமுன் பொலிக்கவும் குறுங்கணா குளிக்குலம் மாடுசென் றிசைப்பவும் மருங்குபம்பை கொட்டவும் சேடுகொண்ட கைவிளிச் சிறந்தவோசை செல்லவும் காடுகொண் டெழுந்தவேடு கைவளைந்து சென்றதே.
| [72] |
நெருங்குபைந் தருக்குலங்கள் நீடுகாடு கூடநேர் வருங்கருஞ் சிலைத்தடக்கை மானவேடர் சேனைதான் பொருந்தடந் திரைக்கடல் பரப்பிடைப் புகும்பெருங் கருந்தரங்க நீள்புனல் களிந்திகன்னி யொத்ததே.
| [73] |
தென்றிசைப் பொருப்புடன் செறிந்தகானின் மானினம் பன்றிவெம் மரைக்கணங்கள் ஆதியான பல்குலம் துன்றிநின்ற வென்றடிச் சுவட்டின்ஒற்றர் சொல்லவே வன்தடக்கை வார்கொடெம் மருங்கும் வேடரோடினார்.
| [74] |
ஒடியெறிந்து வாரொழுக்கி யோசனைப் பரப்பெலாம் நெடியதிண் வலைத்தொடக்கு நீளிடைப் பிணித்துநேர் கடிகொ ளப் பரந்தகாடு காவல்செய் தமைத்தபின் செடிதலைச் சிலைக்கைவேடர் திண்ணனார்முன் நண்ணினார்.
| [75] |
வெஞ்சிலைக்கை வீரனாரும் வேடரோடு கூடிமுன் மஞ்சலைக்கு மாமலைச் சரிப்புறத்து வந்தமா அஞ்சுவித் தடர்க்குநாய்கள் அட்டமாக விட்டுநீள் செஞ்சரத்தி னோடுசூழல் செய்தகானுள் எய்தினார்.
| [76] |
வெய்யமா எழுப்பஏவி வெற்பராயம் ஓடிநேர் எய்யும்வாளி முன்தெரிந்து கொண்டுசெல்ல எங்கணும் மொய்குரல் துடிக்குலங்கள் பம்பைமுன் சிலைத்தெழக் கைவிளித் ததிர்த்துமா எழுப்பினார்கள் கானெலாம்.
| [77] |
ஏனமோடு மானினங்கள் எண்குதிண் கலைக்குலம் கானமேதி யானைவெம் புலிக்கணங்கள் கான்மரை ஆனமாவ னேகமா வெருண்டெழுந்து பாயமுன் சேனைவேடர் மேலடர்ந்து சீறிஅம்பில் நூறினார்.
| [78] |
தாளறுவன இடைதுணிவன தலைதுமிவன கலைமா வாளிகளொடு குடல்சொரிதர மறிவனசில மரைமா நீளுடல்விடு சரமுருவிட நிமிர்வனமிடை கடமா மீளிகொள்கணை படுமுடலெழ விழுவனபல உழையே.
| [79] |
வெங்கணைபடு பிடர்கிழிபட விசையுருவிய கயவாய் செங்கனல்பட அதனொடுகணை செறியமுன்இரு கருமா அங்கெழுசிர முருவியபொழு தடலெயிறுற அதனைப் பொங்கியசின மொடுகவர்வன புரைவனசில புலிகள்.
| [80] |
பின்மறவர்கள் விடுபகழிகள் பிறகுறவயி றிடைபோய் முன்னடுமுக மிசையுறுவிட முடுகியவிசை யுடனக் கொன்முனையடு சரமினமெதிர் குறுகியமுக முருவத் தன்னெதிரெதிர் பொருவனநிகர் தலையனபல கலைகள்.
| [81] |
கருவரையொரு தனுவொடுவிசை கடுகியதென முனைநேர் குரிசில்முன்விடும் அடுசரமெதிர் கொலைபயில்பொழு தவையே பொருகரியொடு சினவரியிடை புரையறவுடல் புகலால் வருமிரவொடு பகலணைவன எனமிடையுமவ் வனமே.
| [82] |
நீளிடைவிசை மிசைகுதிகொள நெடுமுகில்தொட எழுமான் தாளுறுகழல் மறவர்கள்விடு சரநிரைதொடர் வனதாம் வாள்விடுகதிர் மதிபிரிவுற வருமெனவிழும் உழையைக் கோளொடுபயில் பணிதொடர்நிலை கொளவுளவெதிர் பலவே.
| [83] |
கடல்விரிபுனல் கொளவிழுவன கருமுகிலென நிரையே படர்வொடுசெறி தழைபொதுளிய பயில்புதல்வன மதன்மேல் அடலுறுசரம் உடலுறவரை அடியிடம்அல மரலால் மிடைகருமரை கரடிகளொடு விழுவனவன மேதி.
| [84] |
பலதுறைகளின் வெருவரலொடு பயில்வலையற நுழைமா உலமொடுபடர் வனதகையுற உறுசினமொடு கவர்நாய் நிலவியவிரு வினைவலையிடை நிலைசுழல்பவர் நெறிசேர் புலனுறுமன னிடைதடைசெய்த பொறிகளின்அள வுளவே.
| [85] |
துடியடியன மடிசெவியன துறுகயமுனி தொடரார் வெடிபடவிரி சிறுகுருளைகள் மிகைபடுகொலை விரவார் அடிதளர்வுறு கருவுடையன அணைவுறுபிணை அலையார் கொடியனஎதிர் முடுகியும்உறு கொலைபுரிசிலை மறவோர்.
| [86] |
இவ்வகைவரு கொலைமறவினை எதிர்நிகழ்வுழி அதிரக் கைவரைகளும் வெருவுறமிடை கானெழுவதொர் ஏனம் பெய்கருமுகி லெனஇடியொடு பிதிர்கனல்விழி சிதறி மொய்வலைகளை அறநிமிர்வுற முடுகியகடு விசையில்.
| [87] |
போமதுதனை அடுதிறலொடு பொருமறவர்கள் அரியே றாமவர்தொடர் வுறும்விசையுடன் அடிவழிசெலும் அளவில் தாமொருவரு ம் அறிகிலரவர் தனிதொடர்வுழி அதன்மேல் ஏமுனையடு சிலைவிடலைகள் இருவர்கள்அடி பிரியார்.
| [88] |
நாடியகழல் வயவர்களவர் நாணனும்நெடு வரிவில் காடனும்எனும் இருவருமலை காவலரொடு கடிதில் கூடினர்விடு பகழிகளொடு கொலைஞமலிகள் வழுவி நீடியசரி படர்வதுதரு நீழலின்விரை கேழல்.
| [89] |
குன்றியைநிகர் முன்செறஎரி கொடுவிழிஇடி குரல்நீள் பன்றியும்அடல் வன்றிறலொடு படர்நெறிநெடி தோடித் துன்றியதொரு குன்றடிவரை சுலவியநெறி சூழல் சென்றதனிடை நின்றதுவலி தெருமரமரம் நிரையில்.
| [90] |
அத்தருவளர் சுழலிடையடை அதனிலையறி பவர்முன் கைத்தெரிகணை யினிலடுவது கருதலர்விசை கடுகி மொய்த்தெழுசுடர் விடுசுரிகையை முனைபெறஎதிர் உருவிக் குத்தினருடல் முறிபடவெறி குலமறவர்கள் தலைவர்.
| [91] |
வேடர்தங் கரிய செங்கண் வில்லியார் விசையிற் குத்த மாடிரு துணியாய் வீழ்ந்த வராகத்தைக் கண்டு நாணன் காடனே இதன்பின் இன்று காதங்கள் பலவந் தெய்த்தோம் ஆடவன் கொன்றான் அச்சோ என்றவர் அடியில் தாழ்ந்தார்.
| [92] |
மற்றவர் திண்ண னார்க்கு மொழிகின்றார் வழிவந் தாற்ற உற்றது பசிவந் தெம்மை உதவிய இதனைக் காய்ச்சிச் சற்றுநீ அருந்தி யாமும் தின்றுதண் ணீர்கு டித்து வெற்றிகொள் வேட்டைக் காடு குறுகுவோம் மெல்ல என்றார்.
| [93] |
என்றவர் கூற நோக்கித் திண்ணனார் தண்ணீர் எங்கே நன்றுமிவ் வனத்தி லுள்ள தென்றுரை செய்ய நாணன் நின்றவிப் பெரிய தேக்கின் அப்புறஞ் சென்றால் நீண்ட குன்றினுக் கயலே ஓடும் குளிர்ந்தபொன் முகலி என்றான்.
| [94] |
பொங்கிய சினவில் வேடன் சொன்னபின் போவோம் அங்கே இங்கிது தன்னைக் கொண்டு போதுமின் என்று தாமும் அங்கது நோக்கிச் சென்றார் காவதம் அரையிற் கண்டார் செங்கண்ஏ றுடையார் வைகும் திருமலைச் சாரற் சோலை.
| [95] |
நாணனே தோன்றும் குன்றில் நண்ணுவேம் என்ன நாணன் காணநீ போதின் நல்ல காட்சியே காணும் இந்தச் சேணுயர் திருக்கா ளத்தி மலைமிசை யெழுந்து செவ்வே கோணமில் குடுமித் தேவர் இருப்பர்கும் பிடலாம் என்றான்.
| [96] |
ஆவதென் இதனைக் கண்டிங் கணைதொறும் என்மேல் பாரம் போவதொன் றுளது போலும் ஆசையும் பொங்கி மேன்மேல் மேவிய நெஞ்சும் வேறோர் விருப்புற விரையா நிற்கும் தேவரங் கிருப்ப தெங்கே போகென்றார் திண்ண னார்தாம்.
| [97] |
உரைசெய்து விரைந்து செல்ல அவர்களும் உடனே போந்து கரைவளர் கழையின் முத்தும் காரகில் குறடுஞ் சந்தும் வரைதரு மணியும் பொன்னும் வயிரமும் புளினம் தோறும் திரைகள்முன் திரட்டி வைத்த திருமுக லியினைச் சார்ந்தார்.
| [98] |
ஆங்கதன் கரையின் பாங்கோர் அணிநிழற் கேழ லிட்டு வாங்குவிற் காடன் தன்னை மரக்கடை தீக்கோல் பண்ணி ஈங்குநீ நெருப்புக் காண்பாய் இம்மலை யேறிக் கண்டு நாங்கள்வந் தணைவோ மென்று நாணனும் தாமும் போந்தார்.
| [99] |
அளிமிடை கரைசூழ் சோலை அலர்கள்கொண் டணைந்த ஆற்றின் தெளிபுன லிழிந்து சிந்தை தெளிவுறுந் திண்ண னார்தாம் களிவரு மகிழ்ச்சி பொங்கக் காளத்தி கண்டு கொண்டு குளிர்வரு நதியூ டேகிக் குலவரைச் சாரல் சேர்ந்தார்.
| [100] |
கதிரவ னுச்சி நண்ணக் கடவுள்மால் வரையி னுச்சி அதிர்தரு மோசை ஐந்தும் ஆர்கலி முழக்கங் காட்ட இதுவென்கொல் நாணா வென்றார்க் கிம்மலைப் பெருந்தேன் சூழ்ந்து மதுமலர் ஈக்கள் மொய்த்து மருங்கெழும் ஒலிகொல் என்றான்.
| [101] |
முன்புசெய் தவத்தின் ஈட்டம் முடிவிலா இன்ப மான அன்பினை எடுத்துக் காட்ட அளவிலா ஆர்வம் பொங்கி மன்பெருங் காதல் கூர வ ள்ளலார் மலையை நோக்கி என்புநெக் குருகி உள்ளத் தெழுபெரு வேட்கை யோடும்.
| [102] |
நாணனும் அன்பும் முன்பு நளிர்வரை ஏறத் தாமும் பேணுதத் துவங்க ளென்னும் பெருகுசோ பானம் ஏறி ஆணையாம் சிவத்தைச் சார அணைபவர் போல ஐயர் நீணிலை மலையை ஏறி நேர்படச் செல்லும் போதில்.
| [103] |
திங்கள்சேர் சடையார் தம்மைச் சென்றவர் காணா முன்னே அங்கணர் கருணை கூர்ந்த அருள்திரு நோக்க மெய்தத் தங்கிய பவத்தின் முன்னைச் சார்புவிட் டகல நீங்கிப் பொங்கிய ஒளியின் நீழல் பொருவில்அன் புருவம் ஆனார்.
| [104] |
மாகமார் திருக்கா ளத்தி மலையெழு கொழுந்தா யுள்ள எகநா யகரைக் கண்டார் எழுந்தபே ருவகை அன்பின் வேகமா னதுமேற் செல்ல மிக்கதோர் விரைவி னோடு மோகமா யோடிச் சென்றார் தழுவினார் மோந்து நின்றார்.
| [105] |
நெடிதுபோ துயிர்த்து நின்று நிறைந்தெழு மயிர்க்கால் தோறும் வடிவெலாம் புளகம் பொங்க மலர்க்கண்ணீர் அருவி பாய அடியனேற் கிவர்தாம் இங்கே அகப்பட்டார் அச்சோ என்று படியிலாப் பரிவு தானோர் படிவமாம் பரிசு தோன்ற.
| [106] |
வெம்மறக் குலத்து வந்த வேட்டுவச் சாதி யார்போல் கைம்மலை கரடி வேங்கை அரிதிரி கானந் தன்னில் உம்முடன் துணையாய் உள்ளார் ஒருவரு மின்றிக் கெட்டேன் இம்மலைத் தனியே நீரிங் கிருப்பதே என்று நைந்தார்.
| [107] |
கைச்சிலை விழுந்த தோரார் காளையார் மீள இந்தப் பச்சிலை யோடு பூவும் பறித்திட்டு நீரும் வார்த்து மச்சிது செய்தார் யாரோ என்றலும் மருங்கு நின்ற அச்சிலை நாணன் தானும் நான் இது அறிந்தேன் என்பான்.
| [108] |
வன்திறல் உந்தை யோடு மாவேட்டை யாடிப் பண்டிக் குன்றிடை வந்தோ மாகக் குளிர்ந்தநீ ரிவரை யாட்டி ஒன்றிய இலைப்பூச் சூட்டி ஊட்டிமுன் பறைந்தோர் பார்ப்பான் அன்றிது செய்தான் இன்றும் அவன்செய்தா னாகு மென்றான்.
| [109] |
உண்ணிறைந் தெழுந்த தேனும் ஒழிவின்றி ஆரா அன்பில் திண்ணனார் திருக்கா ளத்தி நாயனார்க் கினிய செய்கை எண்ணிய இவைகொ லாமென் றிதுகடைப் பிடித்துக் கொண்டவ் அண்ணலைப் பிரிய மாட்டா தளவில் ஆதரவு நீட.
| [110] |
இவர்தமைக் கண்டே னுக்குத் தனியராய் இருந்தார் என்னே இவர்தமக் கமுது செய்ய இறைச்சியும் இடுவா ரில்லை இவர்தமைப் பிரிய ஒண்ணா தென்செய்கேன் இனியான் சால இவர்தமக் கிறைச்சி கொண்டிங் கெய்தவும் வேண்டு மென்று.
| [111] |
போதுவர் மீண்டு செல்வர் புல்லுவர் மீளப் போவர் காதலின் நோக்கி நிற்பர் கன்றகல் புனிற்றாப் போல்வர் நாதனே அமுது செய்ய நல்லமெல் லிறைச்சி நானே கோதறத் தெரிந்து வேறு கொண்டிங்கு வருவே னென்பார்.
| [112] |
ஆர்தம ராக நீரிங் கிருப்பதென் றகல மாட்டேன் நீர்பசித் திருக்க இங்கு நிற்கவுங் கில்லேன் என்று சோர்தரு கண்ணீர் வாரப் போய்வரத் துணிந்தா ராகி வார்சிலை எடுத்துக் கொண்டு மலர்க்கையால் தொழுது போந்தார்.
| [113] |
முன்புநின் றரிதில் நீங்கி மொய்வரை யிழிந்து நாணன் பின்புவந் தணைய முன்னைப் பிறதுறை வேட்கை நீங்கி அன்புகொண் டுய்ப்பச் செல்லும் அவர்திரு முகலி ஆற்றின் பொன்புனை கரையி லேறிப் புதுமலர்க் காவிற் புக்கார்.
| [114] |
காடனும் எதிரே சென்று தொழுதுதீக் கடைந்து வைத்தேன் கோடுடை ஏனம் உங்கள் குறிப்படி உறுப்பை யெல்லாம் மாடுற நோக்கிக் கொள்ளும் மறித்துநாம் போகைக் கின்று நீடநீர் தாழ்த்த தென்னோ என்றலும் நின்ற நாணன்.
| [115] |
அங்கிவன் மலையில் தேவர் தம்மைக்கண் டணைத்துக் கொண்டு வங்கினைப் பற்றிப் போதா வல்லுடும் பென்ன நீங்கான் இங்குமத் தேவர் தின்ன இறைச்சிகொண் டேகப் போந்தான் நங்குலத் தலைமை விட்டான் நலப்பட்டான் தேவர்க் கென்றான்.
| [116] |
என்செய்தாய் திண்ணா நீதான் என்னமால் கொண்டாய் எங்கள் முன்பெரு முதலி யல்லை யோவென முகத்தை நோக்கார் வன்பெரும் பன்றி தன்னை எரியினில் வதக்கி மிக்க இன்புறு தசைகள் வெவ்வே றம்பினால் ஈர்ந்து கொண்டு.
| [117] |
கோலினிற் கோத்துக் காய்ச்சிக் கொழுந்தசை பதத்தில் வேவ வாலிய சுவைமுன் காண்பான் வாயினில் அதுக்கிப் பார்த்துச் சாலவும் இனிய எல்லாம் சருகிலை யிணைத்த கல்லை ஏலவே கோலிக் கூட அதன்மிசை இடுவா ரானார்.
| [118] |
மருங்குநின் றவர்கள் பின்னும் மயல்மிக முதிர்ந்தான் என்னே அரும்பெறல் இறைச்சி காய்ச்சி அதுக்கிவே றுமிழா நின்றான் பெரும்பசி யுடைய னேனும் பேச்சிலன் எமக்கும் பேறு தரும்பரி சுணரான் மற்றைத் தசைபுறத் தெறியா நின்றான்.
| [119] |
தேவுமால் கொண்டான் இந்தத் திண்ணன்மற் றிதனைத் தீர்க்கல் ஆவதொன் றறியோந் தேவ ராட்டியை நாக னோடு மேவிநாங் கொணர்ந்து தீர்க்க வேண்டும்அவ் வேட்டைக் கானில் ஏவலாட் களையுங் கொண்டு போதுமென் றெண்ணிப் போனார்.
| [120] |
கானவர் போன தோரார் கடிதினில் கல்லை யின்கண் ஊனமு தமைத்துக் கொண்டு மஞ்சனம் ஆட்ட உன்னி மாநதி நன்னீர் தூய வாயினிற் கொண்டு கொய்த தூநறும் பள்ளித் தாமம் குஞ்சிமேல் துதையக் கொண்டார்.
| [121] |
தனுவொரு கையில் வெய்ய சரத்துடன் தாங்கிக் கல்லைப் புனிதமெல் லிறைச்சி நல்ல போனகம் ஒருகை யேந்தி இனியஎம் பிரானார் சாலப் பசிப்பரென் றிரங்கி யேங்கி நனிவிரைந் திறைவர் வெற்பை நண்ணினார் திண்ண னார்தாம்.
| [122] |
இளைத்தனர் நாய னார்என் றீண்டச்சென் றெய்தி வெற்பின் முளைத்தெழு முதலைக் கண்டு முடிமிசை மலரைக் காலில் வளைத்தபொற் செருப்பால் மாற்றி வாயில்மஞ் சனநீர் தன்னை விளைத்தஅன் புமிழ்வார் போல விமலனார் முடிமேல் விட்டார்.
| [123] |
தலைமிசைச் சுமந்த பள்ளித் தாமத்தைத் தடங்கா ளத்தி மலைமிசைத் தம்பி ரானார் முடிமிசை வணங்கிச் சாத்திச் சிலைமிசைப் பொலிந்த செங்கைத் திண்ணனார் சேர்த்த கல்லை இலைமிசைப் படைத்த ஊனின் திருவமு தெதிரே வைத்து.
| [124] |
கொழுவிய தசைக ளெல்லாம் கோலினில் தெரிந்து கோத்தங் கழலுறு பதத்திற் காய்ச்சிப் பல்லினா லதுக்கி நாவிற் பழகிய இனிமை பார்த்துப் படைத்தஇவ் விறைச்சி சால அழகிது நாய னீரே அமுதுசெய் தருளும் என்றார்.
| [125] |
அன்னவிம் மொழிகள் சொல்லி அமுதுசெய் வித்த வேடர் மன்னனார் திருக்கா ளத்தி மலையினார்க் கினிய நல்லூன் இன்னமும் வேண்டு மென்னும் எழுபெருங் காதல் கண்டு பன்னெடுங் கரங்கள் கூப்பிப் பகலவன் மலையில் தாழ்ந்தான்.
| [126] |
அவ்வழி யந்தி மாலை அணைதலும் இரவு சேரும் வெவ்விலங் குளவென் றஞ்சி மெய்ம்மையின் வேறு கொள்ளாச் செவ்விய அன்பு தாங்கித் திருக்கையில் சிலையும் தாங்கி மைவரை யென்ன ஐயர் மருங்குநின் றகலா நின்றார்.
| [127] |
சார்வருந் தவங்கள் செய்தும் முனிவரும் அமரர் தாமும் கார்வரை அடவி சேர்ந்தும் காணுதற் கரியார் தம்மை ஆர்வமுன் பெருக ஆரா அன்பினிற் கண்டு கொண்டே நேர்பெற நோக்கி நின்றார் நீளிருள் நீங்க நின்றார்.
| [128] |
கழைசொரி தரளக் குன்றில் கதிர்நில வொருபாற் பொங்க முழையர வுமிழ்ந்த செய்ய மணிவெயில் ஒருபால் மொய்ப்பத் தழைகதிர்ப் பரிதியோடும சந்திரன் தலைஉ வாவில் குழையணி காதர் வெற்பைக் கும்பிடச் சென்றால் ஒக்கும்.
| [129] |
விரவுபன் மணிகள் கான்ற விரிசுடர்ப் படலை பொங்க மரகதம் ஒளிகொள் நீல மணிகளும் இமைக்குஞ் சோதி பொரவிரு சுடருக் கஞ்சிப் போயின புடைகள் தோறும் இரவிரு ளொதுங்கி னாலே போன்றுள தெங்கும் எங்கும்.
| [130] |
செந்தழல் ஒளியில் பொங்கும் தீபமா மரங்க ளாலும் மந்திகள் முழையில் வைத்த மணிவிளக் கொளிக ளாலும் ஐந்தும்ஆ றடக்கி யுள்ளார் அரும்பெருஞ் சோதி யாலும் எந்தையார் திருக்கா ளத்தி மலையினில் இரவொன் றில்லை.
| [131] |
வருங்கறைப் பொழுது நீங்கி மல்கிய யாமம் சென்று சுருங்கிட அறிந்த புள்ளின் சூழ்சிலம் போசை கேட்டுக் கருங்கட லென்ன நின்ற கண்துயி லாத வீரர் அரும்பெறல் தம்பி ரானார்க் கமுதுகொண் டணைய வேண்டி.
| [132] |
ஏறுகாற் பன்றி யோடும் இருங்கலை புனமான் மற்றும் வேறுவே றினங்கள் வேட்டை வினைத்தொழில் விரகி னாலே ஊறுசெய் காலம் சிந்தித் துருமிகத் தெரியாப் போதின் மாறடு சிலையுங் கொண்டு வள்ளலைத் தொழுது போந்தார்.
| [133] |
மொய்காட்டும் இருள்வாங்கி முகங்காட்டுந் தேர்இரவி மெய்காட்டும் அன்புடைய வில்லியார் தனிவேட்டை எய்காட்டின் மாவளைக்க இட்டகருந் திரையெடுத்துக் கைகாட்டு வான்போலக் கதிர்காட்டி யெழும்பொழுதில்.
| [134] |
எய்தியசீர் ஆகமத்தில் இயம்பியபூ சனைக்கேற்பக் கொய்தமல ரும்புனலும் முதலான கொண்டணைந்தார் மைதழையுங் கண்டத்து மலைமருந்தை வழிபாடு செய்துவருந் தவமுடைய முனிவர்சிவ கோசரியார்.
| [135] |
வந்துதிரு மலையின்கண் வானவர்நா யகர்மருங்கு சிந்தைநிய மத்தோடும் செல்கின்றார் திருமுன்பு வெந்தஇறைச் சியும்எலும்பும் கண்டகல மிதித்தோடி இந்தஅனு சிதங்கெட்டேன் யார்செய்தார் என்றழிவார்.
| [136] |
மேவநேர் வரஅஞ்சா வேடுவரே இதுசெய்தார் தேவதே வேசனே திருமுன்பே இதுசெய்து போவதே இவ்வண்ணம் புகுதநீர் திருவுள்ளம் ஆவதே எனப்பதறி அழுதுவிழுந் தலமந்தார்.
| [137] |
பொருப்பிலெழுஞ் சுடர்க்கொழுந்தின் பூசனையும் தாழ்க்கநான் இருப்பதினி என்என்றவ் இறைச்சியெலும் புடன்இலையும் செருப்படியும் நாயடியும் திருவலகால் மாற்றியபின் விருப்பினொடுந் திருமுகலிப் புனல்மூழ்கி விரைந்தணைந்தார்.
| [138] |
பழுதுபுகுந் ததுதீரப் பவித்திரமாம் செயல்புரிந்து தொழுதுபெறு வனகொண்டு தூயபூ சனைதொடங்கி வழுவில்திரு மஞ்சனமே முதலாக வரும்பூசை முழுதுமுறை மையின்முடித்து முதல்வனார் கழல்பணிந்தார்.
| [139] |
பணிந்தெழுந்து தனிமுதலாம் பரனென்று பன்முறையால் துணிந்தமறை மொழியாலே துதிசெய்து சுடர்த்திங்கள் அணிந்தசடை முடிக்கற்றை அங்கணரை விடைகொண்டு தணிந்தமனத் திருமுனிவர் தபோவனத்தி னிடைச்சார்ந்தார்.
| [140] |
இவ்வண்ணம் பெருமுனிவர் ஏகினார் இனியிப்பால் மைவண்ணக் கருங்குஞ்சி வனவேடர் பெருமானார் கைவண்ணச் சிலைவளைத்துக் கான்வேட்டை தனியாடிச் செய்வண்ணத் திறம்மொழிவேன் தீவினையின் திறம்ஒழிவேன்.
| [141] |
திருமலையின் புறம்போன திண்ணனார் செறிதுறுகல் பெருமலைக ளிடைச்சரிவில் பெரும்பன்றி புனம்மேய்ந்து வருவனவுந் துணிபடுத்து மானினங்கள் கானிடைநின் றொருவழிச்சென் றேறுதுறை ஒளிநின்று கொன்றருளி.
| [142] |
பயில்விளியால் கலையழைத்துப் பாடுபெற ஊடுருவும் அயில்முகவெங் கணைபோக்கி அடியொற்றி மரையினங்கள் துயிலிடையிற் கிடையெய்து தொடர்ந்துகட மைகளெய்து வெயில்படுவெங் கதிர்முதிரத் தனிவேட்டை வினைமுடித்தார்.
| [143] |
பட்டவன விலங்கெல்லாம் படர்வனத்தில் ஒருசூழல் இட்டருகு தீக்கடைகோல் இருஞ்சுரிகை தனையுருவி வெட்டிநறுங் கோல்தேனும் மிகமுறித்துத் தேக்கிலையால் வட்டமுறு பெருங்கல்லை மருங்குபுடை படவமைத்தார்.
| [144] |
இந்தனத்தை முறித்தடுக்கி எரிகடையும் அரணியினில் வெந்தழலைப் பிறப்பித்து மிகவளர்த்து மிருகங்கள் கொந்திஅயில் அலகம்பாற் குட்டமிட்டுக் கொழுப்பரிந்து வந்தனகொண் டெழுந்தழலில் வக்குவன வக்குவித்து.
| [145] |
வாயம்பால் அழிப்பதுவும் வகுப்பதுவும் செய்தவற்றின் ஆயவுறுப் பிறைச்சியெலாம் அரிந்தொருகல் லையிலிட்டுக் காயநெடுங் கோல்கோத்துக் கனலின்கண் உறக்காய்ச்சித் தூயதிரு அமுதமைக்ககச் சுவைகாணல் உறுகின்றார்.
| [146] |
எண்ணிறந்த கடவுளருக் கிடுமுணவு கொண்டூட்டும் வண்ணஎரி வாயின்கண் வைத்ததெனக் காளத்தி அண்ணலார்க் காம்பரிசு தாஞ்சோதித் தமைப்பார்போல் திண்ணனார் திருவாயில் அமைத்தார்ஊன் திருவமுது.
| [147] |
நல்லபத முறவெந்து நாவின்கண் இடுமிறைச்சி கல்லையினிற் படைத்துத்தேன் பிழிந்துகலந் ததுகொண்டு வல்விரைந்து திருப்பள்ளித் தாமமுந்தூய் மஞ்சனமும் ஒல்லையினின் முன்புபோல் உடன்கொண்டு வந்தணைந்தார்.
| [148] |
வந்துதிருக் காளத்தி மலையேறி வனசரர்கள் தந்தலைவ னார்இமையோர் தலைவனார் தமையெய்தி அந்தணனார் பூசையினை முன்புபோ லகற்றியபின் முந்தைமுறை தம்முடைய பூசனையின் செயல்முடிப்பார்.
| [149] |
ஊனமுது கல்லையுடன் வைத்திதுமுன் னையின்நன்றால் ஏனமொடு மான்கலைகள் மரைகடமை யிவையிற்றில் ஆனவுறுப் பிறைச்சியமு தடியேனுஞ் சுவைகண்டேன் தேனுமுடன் கலந்ததிது தித்திக்கும் எனமொழிந்தார்.
| [150] |
இப்பரிசு திருவமுது செய்வித்துத் தம்முடைய ஒப்பரிய பூசனைசெய் தந்நெறியில் ஒழுகுவார் எப்பொழுதும் மேன்மேல்வந் தெழும்அன்பால் காளத்தி அப்பர்எதிர் அல்லுறங்கார் பகல்வேட்டை யாடுவார்.
| [151] |
மாமுனிவர் நாள்தோறும் வந்தணைந்து வனவேந்தர் தாமுயலும் பூசனைக்குச் சாலமிகத் தளர்வெய்தித் தீமையென அதுநீக்கிச் செப்பியஆ கமவிதியால் ஆமுறையில் அருச்சனைசெய் தந்நெறியில் ஒழுகுவரால்.
| [152] |
நாணனொடு காடனும்போய் நாகனுக்குச் சொல்லியபின் ஊணும்உறக் கமுமின்றி அணங்குறைவா ளையுங்கொண்டு பேணுமக னார்தம்பால் வந்தெல்லாம் பேதித்துக் காணுநெறி தங்கள்குறி வாராமற் கைவிட்டார்.
| [153] |
முன்புதிருக் காளத்தி முதல்வனார் அருள்நோக்கால் இன்புறுவே தகத்திரும்பு பொன்னானாற் போல்யாக்கைத் தன்பரிசும் வினையிரண்டும் சாருமலம் மூன்றுமற அன்புபிழம் பாய்த்திரிவார் அவர்கருத்தின் அளவினரோ.
| [154] |
அந்நிலையில் அன்பனார் அறிந்தநெறி பூசிப்ப மன்னியஆ கமப்படியால் மாமுனிவர் அருச்சித்திங் கென்னுடைய நாயகனே இதுசெய்தார் தமைக்காணேன் உன்னுடைய திருவருளால் ஒழித்தருள வேண்டுமென.
| [155] |
அன்றிரவு கனவின்கண் அருள்முனிவர் தம்பாலே மின்திகழுஞ் சடைமவுலி வேதியர்தா மெழுந்தருளி வன்திறல்வே டுவன்என்று மற்றவனை நீநினையேல் நன்றவன்தன் செயல்தன்னை நாமுரைப்பக் கேள்என்று.
| [156] |
அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கல் அன்பென்றும் அவனுடைய அறிவெல்லாம் நமையறியும் அறிவென்றும் அவனுடைய செயலெல்லாம் நமக்கினிய வாமென்றும் அவனுடைய நிலைஇவ்வா றறிநீயென் றருள்செய்வார்.
| [157] |
உனக்கவன்தன் செயல்காட்ட நாளைநீ யொளித்திருந்தால் எனக்கவன்தன் பரிவிருக்கும் பரிசெல்லாம் காண்கின்றாய் மனக்கவலை ஒழிகென்று மறைமுனிவர்க் கருள்செய்து புனற்சடிலத் திருமுடியார் எழுந்தருளிப் போயினார்.
| [158] |
கனவுநிலை நீங்கியபின் விழித்துணர்ந்து கங்குலிடைப் புனைதவத்து மாமுனிவர் புலர்வளவும் கண்துயிலார் மனமுறும்அற் புதமாகி வரும்பயமும் உடனாகித் துனைபுரவித் தனித்தேர்மேல் தோன்றுவான் கதிர்தோன்ற.
| [159] |
முன்னைநாள் போல்வந்து திருமுகலிப் புனல்மூழ்கிப் பன்முறையும் தம்பிரான் அருள்செய்த படிநினைந்து மன்னுதிருக் காளத்தி மலையேறி முன்புபோல் பிஞ்ஞகனைப் பூசித்துப் பின்பாக ஒளித்திருந்தார்.
| [160] |
கருமுகி லென்ன நின்ற கண்படா வில்லி யார்தாம் வருமுறை ஆறாம் நாளில் வரும்இர வொழிந்த காலை அருமறை முனிவ னார்வந் தணைவதன் முன்னம் போகித் தருமுறை முன்பு போலத் தனிப்பெரு வேட்டை யாடி.
| [161] |
மாறில்ஊன் அமுதும் நல்ல மஞ்சனப் புனலுஞ் சென்னி ஏறுநாண் மலரும் வெவ்வே றியல்பினில் அமைத்துக் கொண்டு தேறுவார்க் கமுத மான செல்வனார் திருக்கா ளத்தி ஆறுசேர் சடையார் தம்மை அணுகவந் தணையா நின்றார்.
| [162] |
இத்தனை பொழுதுந் தாழ்த்தேன் எனவிரைந் தேகு வார்முன் மொய்த்தபல் சகுன மெல்லாம் முறைமுறை தீங்கு செய்ய இத்தகு தீய புட்கள் ஈண்டமுன் உதிரங் காட்டும் அத்தனுக் கென்கொல் கெட்டேன் அடுத்ததென் றணையும் போதில்.
| [163] |
அண்ணலார் திருக்கா ளத்தி அடிகளார் முனிவ னார்க்குத் திண்ணனார் பரிவு காட்டத் திருநய னத்தில் ஒன்று துண்ணென உதிரம் பாய இருந்தனர் தூரத் தேஅவ் வண்ணவெஞ் சிலையார் கண்டு வல்விரைந் தோடி வந்தார்.
| [164] |
வந்தவர் குருதி கண்டார் மயங்கினார் வாயில் நன்னீர் சிந்திடக் கையில் ஊனும் சிலையுடன் சிதறி வீழக் கொந்தலர் பள்ளித் தாமங் குஞ்சிநின் றலைந்து சோரப் பைந்தழை அலங்கல் மார்பர் நிலத்திடைப் பதைத்து வீழ்ந்தார்.
| [165] |
விழுந்தவர் எழுந்து சென்று துடைத்தனர் குருதி வீழ்வ தொழிந்திடக் காணார் செய்வ தறிந்திலர் உயிர்த்து மீள அழிந்துபோய் வீழ்ந்தார் தேறி யாரிது செய்தார் என்னா எழுந்தனர் திசைக ளெங்கும் பார்த்தனர் எடுத்தார் வில்லும்.
| [166] |
வாளியுந் தெரிந்து கொண்டிம் மலையிடை எனக்கு மாறா மீளிவெம் மறவர் செய்தார் உளர்கொலோ விலங்கின் சாதி ஆளிமுன் னாகி யுள்ள விளைத்தவோ அறியே னென்று நீளிருங் குன்றச் சாரல் நெடிதிடை நேடிச் சென்றார்.
| [167] |
வேடரைக் காணார் தீய விலங்குகள் மருங்கும் எங்கும் நாடியுங் காணார் மீண்டும் நாயனார் தம்பால் வந்து நீடிய சோகத் தோடு நிறைமலர்ப் பாதம் பற்றி மாடுறக் கட்டிக் கொண்டு கதறினார் கண்ணீர் வார.
| [168] |
பாவியேன் கண்ட வண்ணம் பரமனார்க் கடுத்த தென்னோ ஆவியின் இனிய எங்கள் அத்தனார்க் கடுத்த தென்னோ மேவினார் பிரிய மாட்டா விமலனார்க் கடுத்த தென்னோ ஆவதொன் றறிகி லேன்யான் என்செய்கேன் என்று பின்னும்.
| [169] |
என்செய்தால் தீரு மோதான் எம்பிரான் திறத்துத் தீங்கு முன்செய்தார் தம்மைக் காணேன் மொய்கழல் வேட ரென்றும் மின்செய்வார் பகழிப் புண்கள் தீர்க்குமெய் மருந்து தேடிப் பொன்செய்தாழ் வரையிற் கொண்டு வருவன்நான் என்று போனார்.
| [170] |
நினைத்தனர் வேறு வேறு நெருங்கிய வனங்க ளெங்கும் இனத்திடைப் பிரிந்த செங்கண் ஏறென வெருக்கொண் டெய்திப் புனத்திடைப் பறித்துக் கொண்டு பூதநா யகன்பால் வைத்த மனத்தினுங் கடிது வந்து மருந்துகள் பிழிந்து வார்த்தார்.
| [171] |
மற்றவர் பிழிந்து வார்த்த மருந்தினால் திருக்கா ளத்திக் கொற்றவர் கண்ணிற் புண்ணீர் குறைபடா திழியக் கண்டே இற்றையின் நிலைமைக் கென்னோ இனிச்செய லென்று பார்ப்பார் உற்றநோய் தீர்ப்ப தூனுக் கூனெனும் உரைமுன் கண்டார்.
| [172] |
இதற்கினி என்கண் அம்பால் இடந்தப்பின் எந்தை யார்கண் அதற்கிது மருந்தாய்ப் புண்ணீர் நிற்கவும் அடுக்கு மென்று மதர்த்தெழும் உள்ளத் தோடு மகிழ்ந்துமுன் னிருந்து தங்கண் முதற்சர மடுத்து வாங்கி முதல்வர்தங் கண்ணில் அப்ப.
| [173] |
நின்றசெங் குருதி கண்டார் நிலத்தினின் றேறப் பாய்ந்தார் குன்றென வளர்ந்த தோள்கள் கொட்டினார் கூத்து மாடி நன்றுநான் செய்த இந்த மதியென நகையும் தோன்ற ஒன்றிய களிப்பி னாலே உன்மத்தர் போல மிக்கார்.
| [174] |
வலத்திருக் கண்ணில் தங்கண் அப்பிய வள்ள லார்தம் நலத்தினைப் பின்னும் காட்ட நாயனார் மற்றைக் கண்ணில் உலப்பில்செங் குருதி பாயக் கண்டனர் உலகில் வேடர் குலப்பெரும் தவத்தால் வந்து கொள்கையின் உம்பர் மேலார்.
| [175] |
கண்டபின் கெட்டேன் எங்கள் காளத்தி யார்கண் ணொன்று புண்தரு குருதி நிற்க மற்றைக்கண் குருதி பொங்கி மண்டும்மற் றிதனுக் கஞ்சேன் மருந்துகைக் கண்டே னின்னும் உண்டொரு கண்அக் கண்ணை இடந்தப்பி யொழிப்பே னென்று.
| [176] |
கண்ணுதல் கண்ணில் தங்கண் இடந்தப்பிற் காணும் நேர்பா டெண்ணுவார் தம்பி ரான்தன் திருக்கண்ணில் இடக்கா லூன்றி உண்ணிறை காத லோடும் ஒருதனிப் பகழி கொண்டு திண்ணனார் கண்ணி லூன்றத் தரித்திலர் தேவ தேவர்.
| [177] |
செங்கண்வெள் விடையின் பாகர் திண்ணனார் தம்மை ஆண்ட அங்கணர் திருக்கா ளத்தி அற்புதர் திருக்கை யன்பர் தங்கண்முன் னிடக்குங் கையைத் தடுக்கமூன் றடுக்கு நாக கங்கணர் அமுத வாக்குக் கண்ணப்ப நிற்க வென்றே.
| [178] |
கானவர் பெருமா னார்தங் கண்ணிடந் தப்பும் போதும் ஊனமு துகந்த ஐயர் உற்றுமுன் பிடிக்கும் போதும் ஞானமா முனிவர் கண்டார் நான்முகன் முதலா யுள்ள வானவர் வளர்பூ மாரி பொழிந்தனர் மறைகள் ஆர்ப்ப.
| [179] |
பேறினி யிதன்மேல் உண்டோ பிரான்திருக் கண்ணில் வந்த ஊறுகண் டஞ்சித் தங்கண் இடந்தப்ப உதவுங் கையை ஏறுயர்த் தவர் தங் கையால் பிடித்துக்கொண் டென்வ லத்தின் மாறிலாய் நிற்க வென்று மன்னுபே ரருள்பு ரிந்தார்.
| [180] |
மங்குல்வாழ் திருக்கா ளத்தி மன்னனார் கண்ணில் புண்ணீர் தங்கணால் மாற்றப் பெற்ற தலைவர்தாள் தலைமேற் கொண்டே கங்கைவாழ் சடையார் வாழும் கடவூரிற் கலய னாராம் பொங்கிய புகழின் மிக்கார் திருத்தொண்டு புகல லுற்றேன்.
| [181] |
Back to Top
12.110 குங்குலியக் கலய நாயனார்
வாய்ந்தநீர் வளத்தா லோங்கி மன்னிய பொன்னி நாட்டின் ஏய்ந்தசீர் மறையோர் வாழும் எயிற்பதி யெறிநீர்க் கங்கை தோய்ந்தநீள் சடையார் பண்டு தொண்டர்மேல் வந்த கூற்றைக் காய்ந்தசே வடியார் நீடி யிருப்பது கடவூ ராகும்.
| [1] |
வயலெலாம் விளைசெஞ் சாலி வரம்பெலாம் வளையின் முத்தம் அயலெலாம் வேள்விச் சாலை அணையெலாங் கழுநீர்க் கற்றை புயலெலாங் கமுகின் காடப் புறமெலாம் அதன்சீர் போற்றல் செயலெலாந் தொழில்க ளாறே செழுந்திருக் கடவூ ரென்றும்.
| [2] |
குடங்கையின் அகன்ற உண்கண் கடைசியர் குழுமி யாடும் இடம்படு பண்ணை தோறும் எழுவன மருதம் பாடல் வடம்புரி முந்நூல் மார்பின் வைதிக மறையோர் செய்கைச் சடங்குடை இடங்கள் தோறும் எழுவன சாமம் பாடல்.
| [3] |
துங்கநீள் மருப்பின் மேதி படிந்துபால் சொரிந்த வாவிச் செங்கயல் பாய்ந்து வாசக் கமலமும் தீம்பால் நாறும் மங்குல்தோய் மாடச் சாலை மருங்கிறை யொதுங்கு மஞ்சும் அங்கவை பொழிந்த நீரும் ஆகுதிப் புகைப்பால் நாறும்.
| [4] |
மருவிய திருவின் மிக்க வளம்பதி அதனில் வாழ்வார் அருமறை முந்நூல் மார்பின் அந்தணர் கலயர் என்பார் பெருநதி அணியும் வேணிப் பிரான்கழல் பேணி நாளும் உருகிய அன்பு கூர்ந்த சிந்தையார் ஒழுக்க மிக்கார்.
| [5] |
பாலனாம் மறையோன் பற்றப் பயங்கெடுத் தருளு மாற்றால் மாலுநான் முகனுங் காணா வடிவுகொண் டெதிரே வந்து காலனார் உயிர்செற் றார்க்குக் கமழ்ந்தகுங் குலியத் தூபம் சாலவே நிறைந்து விம்ம இடும்பணி தலைநின் றுள்ளார்.
| [6] |
கங்கைநீர் கலிக்கும் சென்னிக் கண்ணுதல் எம்பி ராற்குப் பொங்குகுங் குலியத் தூபம் பொலிவுறப் போற்றிச் செல்ல அங்கவ ரருளி னாலே வறுமைவந் தடைந்த பின்னும் தங்கள்நா யகர்க்குத் தாமுன் செய்பணி தவாமை யுய்த்தார்.
| [7] |
இந்நெறி ஒழுகு நாளில் இலம்பாடு நீடு செல்ல நன்னிலம் முற்றும் விற்றும் நாடிய அடிமை விற்றும் பன்னெடுந் தனங்கள் மாளப் பயில்மனை வாழ்க்கை தன்னின் மன்னிய சுற்றத் தோடு மக்களும் வருந்தி னார்கள்.
| [8] |
யாதொன்றும் இல்லை யாகி இருபக லுணவு மாறிப் பேதுறும் மைந்த ரோடும் பெருகுசுற் றத்தை நோக்கிக் காதல்செய் மனைவி யார்தங் கணவனார் கலய னார்கைக் கோதில்மங் கலநூல் தாலி கொடுத்துநெற் கொள்ளு மென்றார்
| [9] |
அப்பொழு ததனைக் கொண்டு நெற்கொள்வான் அவரும் போக ஒப்பில்குங் குலியங் கொண்டோர் வணிகனும் எதிர்வந் துற்றான் இப்பொதி யென்கொல் என்றார் உள்ளவா றியம்பக் கேட்டு முப்புரி வெண்ணூல் மார்பர் முகமலர்ந் திதனைச் சொன்னார்.
| [10] |
ஆறுசெஞ் சடைமேல் வைத்த அங்கணர் பூசைக் கான நாறுகுங் குலியம் ஈதேல் நானின்று பெற்றேன் நல்ல பேறுமற் றிதன்மே லுண்டோ பெறாப்பேறு பெற்று வைத்து வேறினிக் கொள்வ தென்னென் றுரைத்தெழும் விருப்பின் மிக்கார்.
| [11] |
பொன்தரத் தாரு மென்று புகன்றிட வணிகன் தானும் என்தர விசைந்த தென்னத் தாலியைக் கலயர் ஈந்தார் அன்றவன் அதனை வாங்கி அப்பொதி கொடுப்பக் கொண்டு நின்றிலர் விரைந்து சென்றார் நிறைந்தெழு களிப்பி னோடும்.
| [12] |
விடையவர் வீரட் டானம் விரைந்துசென் றெய்தி என்னை உடையவர் எம்மை யாளும் ஒருவர்தம் பண்டா ரத்தில் அடைவுற ஒடுக்கி யெல்லாம் அயர்த்தெழும் அன்பு பொங்கச் சடையவர் மலர்த்தாள் போற்றி இருந்தனர் தமக்கொப் பில்லார்.
| [13] |
அன்பரங் கிருப்ப நம்பர் அருளினால் அளகை வேந்தன் தன்பெரு நிதியந் தூர்த்துத் தரணிமேல் நெருங்க எங்கும் பொன்பயில் குவையும் நெல்லும் பொருவில்பல் வளனும் பொங்க மன்பெரும் செல்வ மாக்கி வைத்தனன் மனையில் நீட.
| [14] |
மற்றவர் மனைவி யாரும் மக்களும் பசியால் வாடி அற்றைநா ளிரவு தன்னில் அயர்வுறத் துயிலும் போதில் நற்றவக் கொடிய னார்க்குக் கனவிடை நாதன் நல்கத் தெற்றென உணர்ந்து செல்வங் கண்டபின் சிந்தை செய்வார்.
| [15] |
கொம்பனா ரில்ல மெங்கும் குறைவிலா நிறைவிற் காணும் அம்பொனின் குவையும் நெல்லும் அரிசியும் முதலா யுள்ள எம்பிரான் அருளாம் என்றே இருகரங் குவித்துப் போற்றித் தம்பெருங் கணவ னார்க்குத் திருவமு தமைக்கச் சார்ந்தார்.
| [16] |
காலனைக் காய்ந்த செய்ய காலனார் கலய னாராம் ஆலுமன் புடைய சிந்தை அடியவ ரறியு மாற்றால் சாலநீ பசித்தாய் உன்தன் தடநெடு மனையில் நண்ணிப் பாலின்இன் அடிசில் உண்டு பருவரல் ஒழிக வென்றார்.
| [17] |
கலயனார் அதனைக் கேளாக் கைதொழு திறைஞ்சிக் கங்கை அலைபுனற் சென்னி யார்தம் அருள்மறுத் திருக்க அஞ்சித் தலைமிசைப் பணிமேற் கொண்டு சங்கரன் கோயில் நின்று மலைநிகர் மாட வீதி மருங்குதம் மனையைச் சார்ந்தார்.
| [18] |
இல்லத்தில் சென்று புக்கார் இருநிதிக் குவைகள் ஆர்ந்த செல்வத்தைக் கண்டு நின்று திருமனை யாரை நோக்கி வில்லொத்த நுதலாய் இந்த விளைவெலாம் என்கொல் என்ன அல்லொத்த கண்டன் எம்மான் அருள்தர வந்த தென்றார்.
| [19] |
மின்னிடை மடவார் கூற மிக்கசீர்க் கலய னார்தாம் மன்னிய பெருஞ்செல் வத்து வளமலி சிறப்பை நோக்கி என்னையும் ஆளுந் தன்மைத் தெந்தைஎம் பெருமான் ஈசன் தன்னருள் இருந்த வண்ணம் என்றுகை தலைமேற் கொண்டார்.
| [20] |
பதுமநற் றிருவின் மிக்கார் பரிகலந் திருத்திக் கொண்டு கதுமெனக் கணவ னாரைக் கண்ணுதற் கன்ப ரோடும் விதிமுறை தீபம் ஏந்தி மேவும்இன் அடிசில் ஊட்ட அதுநுகர்ந் தின்பம் ஆர்ந்தார் அருமறைக் கலய னார்தாம்.
| [21] |
ஊர்தொறும் பலிகொண் டுய்க்கும் ஒருவன தருளி னாலே பாரினில் ஆர்ந்த செல்வம் உடையராம் பண்பில் நீடிச் சீருடை அடிசில் நல்ல செழுங்கறி தயிர்நெய் பாலால் ஆர்தரு காதல் கூர அடியவர்க் குதவும் நாளில்.
| [22] |
செங்கண்வெள் ளேற்றின் பாகன் திருப்பனந் தாளின் மேவும் அங்கணன் செம்மை கண்டு கும்பிட அரசன் ஆர்வம் பொங்கித்தன் வேழம் எல்லாம் பூட்டவும் நேர்நில் லாமைக் கங்குலும் பகலும் தீராக் கவலையுற் றழுங்கிச் செல்ல.
| [23] |
மன்னவன் வருத்தங் கேட்டு மாசறு புகழின் மிக்க நன்னெறிக் கலய னார்தாம் நாதனை நேரே காணும் அந்நெறி தலைநின் றான்என் றரசனை விரும்பித் தாமும் மின்னெறித் தனைய வேணி விகிர்தனை வணங்க வந்தார்.
| [24] |
மழுவுடைச் செய்ய கையர் கோயில்கள் மருங்கு சென்று தொழுதுபோந் தன்பி னோடும் தொன்மறை நெறிவ ழாமை முழுதுல கினையும் போற்ற மூன்றெரி புரப்போர் வாழும் செழுமலர்ச் சோலை வேலித் திருப்பனந் தாளிற் சேர்ந்தார்.
| [25] |
காதலால் அரசன் உற்ற வருத்தமுங் களிற்றி னோடும் தீதிலாச் சேனை செய்யும் திருப்பணி நேர்ப டாமை மேதினி மிசையே எய்த்து வீழ்ந்திளைப் பதுவும் நோக்கி மாதவக் கலயர் தாமும் மனத்தினில் வருத்தம் எய்தி.
| [26] |
சேனையும் ஆனை பூண்ட திரளுமெய்த் தெழாமை நோக்கி யானுமிவ் விளைப்புற் றெய்க்கும் இதுபெற வேண்டு மென்று தேனலர் கொன்றை யார்தம் திருமேனிப் பூங்கச் சேய்ந்த மானவன் கயிறு பூண்டு கழுத்தினால் வருந்த லுற்றார்.
| [27] |
நண்ணிய ஒருமை யன்பின் நாருறு பாசத் தாலே திண்ணிய தொண்டர் பூட்டி இளைத்தபின் திறம்பி நிற்க ஒண்ணுமோ கலய னார்தம் ஒருப்பாடு கண்ட போதே அண்ணலார் நேரே நின்றார் அமரரும் விசும்பில் ஆர்த்தார்.
| [28] |
பார்மிசை நெருங்க எங்கும் பரப்பினர் பயில்பூ மாரி தேர்மலி தானை மன்னன் சேனையும் களிறும் எல்லாம் கார்பெறு கானம் போலக் களித்தன கைகள் கூப்பி வார்கழல் வேந்தன் தொண்டர் மலரடி தலைமேல் வைத்து
| [29] |
விண்பயில் புரங்கள் வேவ வைதிகத் தேரின் மேருத் திண்சிலை குனிய நின்றார் செந்நிலை காணச் செய்தீர் மண்பகிர்ந் தவனுங் காணா மலரடி யிரண்டும் யாரே பண்புடை யடியார் அல்லால் பரிந்துநேர் காண வல்லார்.
| [30] |
என்றுமெய்த் தொண்டர் தம்மை ஏத்தியங் கெம்பி ரானுக் கொன்றிய பணிகள் மற்றும் உள்ளன பலவும் செய்து நின்றவெண் கவிகை மன்னன் நீங்கவும் நிகரில் அன்பர் மன்றிடை யாடல் செய்யும் மலர்க்கழல் வாழ்த்தி வைகி.
| [31] |
சிலபகல் கழிந்த பின்பு திருக்கட வூரில் நண்ணி நிலவுதம் பணியில் தங்கி நிகழுநாள் நிகரில் காழித் தலைவராம் பிள்ளை யாரும் தாண்டகச் சதுர ராகும் அலர்புகழ் அரசும் கூட அங்கெழுந் தருளக் கண்டு.
| [32] |
மாறிலா மகிழ்ச்சி பொங்க எதிர்கொண்டு மனையில் எய்தி ஈறிலா அன்பின் மிக்கார்க் கின்னமு தேற்கும் ஆற்றால் ஆறுநற் சுவைகள் ஓங்க அமைத்தவர் அருளே அன்றி நாறுபூங் கொன்றை வேணி நம்பர்தம் அருளும் பெற்றார்.
| [33] |
கருப்புவில் லோனைக் கூற்றைக் காய்ந்தவர் கடவூர் மன்னி விருப்புறும் அன்பு மேன்மேல் மிக்கெழும் வேட்கை கூர ஒருப்படும் உள்ளத் தன்மை உண்மையால் தமக்கு நேர்ந்த திருப்பணி பலவும் செய்து சிவபத நிழலில் சேர்ந்தார்.
| [34] |
தேனக்க கோதை மாதர் திருநெடுந் தாலி மாறிக் கூனல்தண் பிறையி னார்க்குக் குங்குலி யங்கொண் டுய்த்த பான்மைத்திண் கலய னாரைப் பணிந்தவர் அருளி னாலே மானக்கஞ் சாறர் மிக்க வண்புகழ் வழுத்த லுற்றேன்.
| [35] |
Back to Top
12.120 மானக்கஞ்சாற நாயனார் புராணம்
மேலாறு செஞ்சடைமேல் வைத்தவர்தாம் விரும்பியது நூலாறு நன்குணர்வோர் தாம்பாடும் நோன்மையது கோலாறு தேன்பொழியக் கொழுங்கனியின் சாறொழுகும் காலாறு வயற்கரும்பின் கமழ்சாறூர் கஞ்சாறூர்.
| [1] |
கண்ணீலக் கடைசியர்கள் கடுங்களையிற் பிழைத்தொதுங்கி உண்ணீர்மைப் புணர்ச்சிக்கண் உறைத்துமலர்க் கண்சிவக்கும் தண்ணீர்மென் கழுநீர்க்குத் தடஞ்சாலி தலைவணங்கும் மண்ணீர்மை நலஞ்சிறந்த வளவயல்கள் உளஅயல்கள்.
| [2] |
புயல்காட்டுங் கூந்தல்சிறு புறங்காட்டப் புனமயிலின் இயல்காட்டி இடைஒதுங்க இனங்காட்டும் உழத்தியர்கண் முயல்காட்டும் மதிதோற்கும் முகங்காட்டக் கண்மூரிக் கயல்காட்டுந் தடங்கள்பல கதிர்காட்டுந் தடம்பணைகள்.
| [3] |
சேறணிதண் பழனவயல் செழுநெல்லின் கொழுங்கதிர்போய் வேறருகு மிடைவேலிப் பைங்கமுகின் மிடறுரிஞ்சி மாறெழுதிண் குலைவளைப்ப வண்டலைதண் டலையுழவர் தாறரியும் நெடுங்கொடுவாள் அனையவுள தனியிடங்கள்.
| [4] |
பாங்குமணிப் பலவெயிலும் சுலவெயிலும் உளமாடம் ஞாங்கரணி துகிற்கொடியும் நகிற்கொடியும் உளவரங்கம் ஓங்குநிலைத் தோரணமும் பூரணகும் பமும்உளவால் பூங்கணைவீ தியில்அணைவோர் புலமறுகுஞ் சிலமறுகு.
| [5] |
மனைசாலும் நிலையறத்தின் வழிவந்த வளம்பெருகும் வினைசாலும் உழவுதொழில் மிக்கபெருங் குடிதுவன்றிப் புனைசாயல் மயிலனையார் நடம்புரியப் புகல்முழவங் கனைசாறு மிடைவீதிக் கஞ்சாறு விளங்கியதால்.
| [6] |
அப்பதியிற் குலப்பதியாய் அரசர்சே னாபதியாம் செப்பவருங் குடிவிளங்கத் திருஅவதா ரஞ்செய்தார் மெய்ப்பொருளை அறிந்துணர்ந்தார் விழுமியவே ளாண்குடிமை வைப்பனைய மேன்மையினார் மானக்கஞ் சாறனார்.
| [7] |
பணிவுடைய வடிவுடையார் பணியினொடும் பனிமதியின் அணிவுடைய சடைமுடியார்க் காளாகும் பதம்பெற்ற தணிவில்பெரும் பேறுடையார் தம்பெருமான் கழல்சார்ந்த துணிவுடைய தொண்டர்க்கே ஏவல்செயுந் தொழில்பூண்டார்.
| [8] |
மாறில்பெருஞ் செல்வத்தின் வளம்பெருக மற்றதெலாம் ஆறுலவுஞ் சடைக்கற்றை அந்தணர்தம் அடியாராம் ஈறில்பெருந் திருவுடையார் உடையாரென் றியாவையுநேர் கூறுவதன் முன்னவர்தம் குறிப்பறிந்து கொடுத்துள்ளார்.
| [9] |
விரிகடல்சூழ் மண்ணுலகில் விளக்கியஇத் தன்மையராம் பெரியவர்க்கு முன்சிலநாள் பிள்ளைப்பே றின்மையினால் அரியறியா மலர்க்கழல்கள் அறியாமை யறியாதார் வருமகவு பெறற்பொருட்டு மனத்தருளால் வழுத்தினார்.
| [10] |
குழைக்கலையும் வடிகாதில் கூத்தனார் அருளாலே மழைக்குதவும் பெருங்கற்பின் மனைக்கிழத்தி யார்தம்பால் இழைக்கும்வினைப் பயன்சூழ்ந்த இப்பிறவிக் கொடுஞ்சூழல் பிழைக்குநெறி தமக்குதவப் பெண்கொடியைப் பெற்றெடுத்தார்.
| [11] |
பிறந்தபெரு மகிழ்ச்சியினால் பெருமூதூர் களிசிறப்பச் சிறந்தநிறை மங்கலதூ ரியம்முழங்கத் தேவர்பிரான் அறந்தலைநின் றவர்க்கெல்லாம் அளவில்வளத் தருள்பெருக்கிப் புறந்தருவார் போற்றிசைப்பப் பொற்கொடியை வளர்க்கின்றார்.
| [12] |
காப்பணியும் இளங்குழவிப் பதம்நீங்கிக் கமழ்சுரும்பின் பூப்பயிலும் சுருட்குழலும் பொலங்குழையும் உடன்தாழ யாப்புறுமென் சிறுமணிமே கலையணிசிற் றாடையுடன் கோப்பமைகிண் கிணியசையக் குறுந்தளிர்மெல் லடியொதுங்கி.
| [13] |
புனைமலர்மென் கரங்களினால் போற்றியதா தியர்நடுவண் மனையகத்து மணிமுன்றில் மணற்சிற்றில் இழைத்துமணிக் கனைகுரல்நூ புரம்அலையக் கழல்முதலாப் பயின்றுமுலை நனைமுகஞ்செய் முதற்பருவம் நண்ணினள்அப் பெண்ணமுதம்.
| [14] |
உறுகவின்மெய்ப் புறம்பொலிய ஒளிநுசுப்பை முலைவருத்த முறுவல்புறம் அலராத முகிண்முத்த நகையென்னும் நறுமுகைமென் கொடிமருங்குல் நளிர்ச்சுருள்அம் தளிர்ச்செங்கை மறுவில்குலக் கொழுந்தினுக்கு மணப்பருவம் வந்தணைய.
| [15] |
திருமகட்கு மேல்விளங்குஞ் செம்மணியின் தீபமெனும் ஒருமகளை மண்ணுலகில் ஓங்குகுல மரபினராய்க் கருமிடற்று மறையவனார் தமராய கழல்ஏயர் பெருமகற்கு மகட்பேச வந்தணைந்தார் பெருமுதியோர்.
| [16] |
வந்தமூ தறிவோரை மானக்கஞ் சாறனார் முந்தைமுறை மையின்விரும்பி மொழிந்தமணத் திறங்கேட்டே எந்தமது மரபினுக்குத் தகும்பரிசால் ஏயுமெனச் சிந்தைமகிழ் வுறஉரைத்து மணநேர்ந்து செலவிட்டார்.
| [17] |
சென்றவருங் கஞ்சாறர் மணமிசைந்த படிசெப்பக் குன்றனைய புயத்தேயர் கோனாரும் மிகவிரும்பி நின்றநிலை மையினிரண்டு திறத்தார்க்கும் நேர்வாய மன்றல்வினை மங்கலநாள் மதிநூல்வல் லவர்வகுத்தார்.
| [18] |
மங்கலமாம் செயல்விரும்பி மகட்பயந்த வள்ளலார் தங்குலநீள் சுற்றமெலாம் தயங்குபெருங் களிசிறப்பப் பொங்கியவெண் முளைப்பெய்து பொலங்கலங்கள் இடைநெருங்கக் கொங்கலர்தண் பொழில்மூதூர் வதுவைமுகங் கோடித்தார்.
| [19] |
கஞ்சாறர் மகட்கொடுப்பக் கைப்பிடிக்க வருகின்ற எஞ்சாத புகழ்ப்பெருமை ஏயர்குலப் பெருமானும் தஞ்சால்பு நிறைசுற்றந் தலைநிறைய முரசியம்ப மஞ்சாலும் மலர்ச்சோலைக் கஞ்சாற்றின் மருங்கணைய.
| [20] |
வள்ளலார் மணமவ்வூர் மருங்கணையா முன்மலர்க்கண் ஒள்ளிழையைப் பயந்தார்தம் திருமனையில் ஒருவழியே தெள்ளுதிரை நீருலகம் உய்வதற்கு மற்றவர்தம் உள்ளநிலைப் பொருளாய உம்பர்பிரான் தாமணைவார்.
| [21] |
முண்டநிறை நெற்றியின்மேல் முண்டித்த திருமுடியில் கொண்டசிகை முச்சியின்கண் கோத்தணிந்த எற்புமணி பண்டொருவன் உடலங்கம் பரித்தநாள் அதுகடைந்த வெண்தரளம் எனக்காதின் மிசையசையுங் குண்டலமும்.
| [22] |
அவ்வென்பின் ஒளிமணிகோத் தணிந்ததிருத் தாழ்வடமும் பைவன்பேர் அரவொழியத் தோளிலிடும் பட்டிகையும் மைவந்த நிறக்கேச வடப்பூணு நூலும்மனச் செவ்வன்பர் பவமாற்றுந் திருநீற்றுப் பொக்கணமும்.
| [23] |
ஒருமுன்கைத் தனிமணிகோத் தணிந்தவொளிர் சூத்திரமும் அருமறைநூற் கோவணத்தின் மிசையசையும் திருவுடையும் இருநிலத்தின் மிசைதோய்ந்த எழுதரிய திருவடியும் திருவடியில் திருப்பஞ்ச முத்திரையுந் திகழ்ந்திலங்க.
| [24] |
பொடிமூடு தழலென்னத் திருமேனி தனிற்பொலிந்த படிநீடு திருநீற்றின் பரப்பணிந்த பான்மையராய்க் கொடிநீடு மறுகணைந்து தம்முடைய குளிர்கமலத் தடிநீடும் மனத்தன்பர் தம்மனையி னகம்புகுந்தார்.
| [25] |
வந்தணைந்த மாவிரத முனிவரைக்கண் டெதிரெழுந்து சிந்தைகளி கூர்ந்துமகிழ் சிறந்தபெருந் தொண்டனார் எந்தைபிரான் புரிதவத்தோர் இவ்விடத்தே யெழுந்தருள உய்ந்தொழிந்தேன் அடியேன்என் றுருகியஅன் பொடுபணிந்தார்.
| [26] |
நற்றவராம் பெருமானார் நலமிகும்அன் பரைநோக்கி உற்றசெயல் மங்கலமிங் கொழுகுவதென் எனஅடியேன் பெற்றதொரு பெண்கொடிதன் வதுவையெனப் பெருந்தவரும் மற்றுமக்குச் சோபனம்ஆ குவதென்று வாய்மொழிந்தார்.
| [27] |
ஞானச்செய் தவரடிமேற் பணிந்துமனை யகம்நண்ணி மானக்கஞ் சாறனார் மணக்கோலம் புனைந்திருந்த தேனக்க மலர்க்கூந்தல் திருமகளைக் கொண்டணைந்து பானற்கந் தரமறைத்து வருமவரைப் பணிவித்தார்.
| [28] |
தஞ்சரணத் திடைப்பணிந்து தாழ்ந்தெழுந்த மடக்கொடிதன் மஞ்சுதழைத் தெனவளர்ந்த மலர்க்கூந்தற் புறம்நோக்கி அஞ்சலிமெய்த் தொண்டரைப்பார்த் தணங்கிவள்தன் மயிர்நமக்குப் பஞ்சவடிக் காமென்றார் பரவஅடித் தலங்கொடுப்பார்.
| [29] |
அருள்செய்த மொழிகேளா அடற்சுரிகை தனையுருவிப் பொருள்செய்தா மெனப்பெற்றேன் எனக்கொண்டு பூங்கொடிதன் இருள்செய்த கருங்கூந்தல் அடியிலரிந் தெதிர்நின்ற மருள்செய்த பிறப்பறுப்பார் மலர்க்கரத்தி னிடைநீட்ட.
| [30] |
வாங்குவார் போல்நின்ற மறைப்பொருளாம் அவர்மறைந்து பாங்கின்மலை வல்லியுடன் பழையமழ விடையேறி ஓங்கியவிண் மிசைவந்தார் ஒளிவிசும்பின் நிலம்நெருங்கத் தூங்கியபொன் மலர்மாரி தொழும்பர்தொழு தெதிர்விழுந்தார்.
| [31] |
விழுந்தெழுந்து மெய்ம்மறந்த மெய்யன்பர் தமக்குமதிக் கொழுந்தலைய விழுங்கங்கை குதித்தசடைக் கூத்தனார் எழும்பரிவு நம்பக்கல் உனக்கிருந்த பரிசிந்தச் செழும்புவனங் களிலேறச் செய்தோமென் றருள்செய்தார்.
| [32] |
மருங்குபெருங் கணநாதர் போற்றிசைப்ப வானவர்கள் நெருங்கவிடை மேல்கொண்டு நின்றவர்முன் நின்றவர்தாம் ஒருங்கியநெஞ் சொடுகரங்கள் உச்சியின்மேற் குவித்தையர் பெருங்கருணைத் திறம்போற்றும் பெரும்பேறு நேர்பெற்றார்.
| [33] |
தொண்டனார் தமக்கருளிச் சூழ்ந்திமையோர் துதிசெய்ய இண்டைவார் சடைமுடியார் எழுந்தருளிப் போயினார் வண்டுவார் குழற்கொடியைக் கைப்பிடிக்க மணக்கோலங் கண்டவர்கள் கண்களிப்பக் கலிக்காம னார்புகுந்தார்.
| [34] |
வந்தணைந்த ஏயர்குல மன்னவனார் மற்றந்தச் சிந்தைநினை வரியசெயல் செறிந்தவர்பால் கேட்டருளிப் புந்தியினில் மிகவுவந்து புனிதனார் அருள்போற்றிச் சிந்தைதளர்ந் தருள்செய்த திருவாக்கின் திறங்கேட்டு.
| [35] |
மனந்தளரும் இடர்நீங்கி வானவர்நா யகரருளால் புனைந்தமலர்க் குழல்பெற்ற பூங்கொடியை மணம்புணர்ந்து தனம்பொழிந்து பெருவதுவை உலகெலாந் தலைசிறப்ப இனம்பெருகத் தம்முடைய எயின்மூதூர் சென்றணைந்தார்.
| [36] |
ஒருமகள் கூந்தல் தன்னை வதுவைநாள் ஒருவர்க் கீந்த பெருமையார் தன்மை போற்றும் பெருமைஎன் அளவிற் றாமே மருவிய கமரிற் புக்க மாவடு விடேலென் னோசை உரிமையால் கேட்க வல்லார் திறமினி யுரைக்க லுற்றேன்.
| [37] |
Back to Top
12.130 அரிவாட்டாய நாயனார் புராணம்
வரும்பு னற்பொன்னி நாட்டொரு வாழ்பதி சுரும்பு வண்டொடு சூழ்ந்து முரன்றிட விரும்பு மென்க ணுடையவாய் விட்டுநீள் கரும்பு தேன்சொரி யுங்கண மங்கலம்.
| [1] |
செந்நெ லார்வயற் கட்டசெந் தாமரை முன்னர் நந்துமிழ் முத்தம் சொரிந்திடத் துன்னு மள்ளர்கைம் மேற்கொண்டு தோன்றுவார் மன்னு பங்கய மாநிதி போன்றுளார்.
| [2] |
வளத்தில் நீடும் பதியதன் கண்வரி உளர்த்தும் ஐம்பா லுடையோர் முகத்தினும் களத்தின் மீதுங் கயல்பாய் வயல்அயல் குளத்தும் நீளுங் குழையுடை நீலங்கள்.
| [3] |
அக்கு லப்பதி தன்னில் அறநெறித் தக்க மாமனை வாழ்க்கையில் தங்கினார் தொக்க மாநிதித் தொன்மையில் ஓங்கிய மிக்க செல்வத்து வேளாண் தலைமையார்.
| [4] |
தாய னாரெனும் நாமந் தரித்துளார் சேய காலந் தொடர்ந்தும் தெளிவிலா மாய னார்மண் கிளைத்தறி யாதஅத் தூய நாண்மலர்ப் பாதந் தொடர்ந்துளார்.
| [5] |
மின்னு செஞ்சடை வேதியர்க் காமென்று செந்நெல் இன்னமு தோடுசெங் கீரையும் மன்னு பைந்துணர் மாவடு வுங்கொணர்ந் தன்ன வென்றும் அமுதுசெய் விப்பரால்.
| [6] |
இந்த நன்னிலை இன்னல்வந் தெய்தினும் சிந்தை நீங்காச் செயலின் உவந்திட முந்தை வேத முதல்வ ரவர்வழி வந்த செல்வம் அறியாமை மாற்றினார்.
| [7] |
மேவு செல்வங் களிறுண் விளங்கனி ஆவ தாகி அழியவும் அன்பினால் பாவை பாகர்க்கு முன்பு பயின்றஅத் தாவில் செய்கை தவிர்ந்திலர் தாயனார்.
| [8] |
அல்லல் நல்குர வாயிடக் கூலிக்கு நெல்ல றுத்துமெய்ந் நீடிய அன்பினால் நல்ல செந்நெலிற் பெற்றன நாயனார்க் கொல்லை யின்னமு தாக்கொண் டொழுகுவார்.
| [9] |
சாலி நேடி அறுத்தவை தாம்பெறும் கூலி யெல்லாந் திருவமு தாக்கொண்டு நீல நெல்லரி கூலிகொண் டுண்ணுநாள் மால யற்கரி யாரது மாற்றுவார்.
| [10] |
நண்ணிய வயல்கள் எல்லாம் நாடொறும் முன்னங் காண வண்ணவார் கதிர்ச்செஞ் சாலி ஆக்கிட மகிழ்ந்து சிந்தை அண்ணலார் அறுத்த கூலி கொண்டிஃ தடியேன் செய்த புண்ணிய மென்று போத அமுதுசெய் விப்பா ரானார்.
| [11] |
வைகலும் உணவி லாமை மனைப்படப் பையினிற் புக்கு நைகர மில்லா அன்பின் நங்கையார் அடகு கொய்து பெய்கலத் தமைத்து வைக்கப் பெருந்தகை யருந்தித் தங்கள் செய்கடன் முட்டா வண்ணந் திருப்பணி செய்யும் நாளில்.
| [12] |
மனைமருங் கடகு மாள வடநெடு வான மீனே அனையவர் தண்ணீர் வார்க்க அமுதுசெய் தன்ப னாரும் வினைசெயல் முடித்துச் செல்ல மேவுநா ளொருநாள் மிக்க முனைவனார் தொண்டர்க் கங்கு நிகழ்ந்தது மொழியப் பெற்றேன்.
| [13] |
முன்புபோல் முதல்வ னாரை அமுதுசெய் விக்க மூளும் அன்புபோல் தூய செந்நெல் அரிசிமா வடுமென் கீரை துன்புபோம் மனத்துத் தொண்டர் கூடையிற் சுமந்து போகப் பின்புபோம் மனைவி யார்ஆன் பெற்றஅஞ் சேந்திச் சென்றார்.
| [14] |
போதரா நின்ற போது புலர்ந்துகால் தளர்ந்து தப்பி மாதரார் வருந்தி வீழ்வார் மட்கல மூடு கையால் காதலால் அணைத்தும் எல்லாங் கமரிடைச் சிந்தக் கண்டு பூதநா யகர்தந் தொண்டர் போவதங் கினிஏன் என்று.
| [15] |
நல்லசெங் கீரை தூய மாவடு அரிசி சிந்த அல்லல்தீர்த் தாள வல்லார் அமுதுசெய் தருளும் அப்பே றெல்லையில் தீமை யேனிங் கெய்திடப் பெற்றி லேனென் றொல்லையி லரிவாள் பூட்டி ஊட்டியை அரிய லுற்றார்.
| [16] |
ஆட்கொள்ளும் ஐயர் தாமிங் கமுதுசெய் திலர்கொ லென்னாப் பூட்டிய அரிவாள் பற்றிப் புரையற விரவு மன்பு காட்டிய நெறியி னுள்ளந் தண்டறக் கழுத்தி னோடே ஊட்டியும் அரியா நின்றார் உறுபிறப் பரிவார் ஒத்தார்.
| [17] |
மாசறு சிந்தை யன்பர் கழுத்தரி அரிவாள் பற்றும் ஆசில்வண் கையை மாற்ற அம்பலத் தாடு மையர் வீசிய செய்ய கையும் மாவடு விடேல்வி டேலென் றோசையுங் கமரி னின்றும் ஒக்கவே எழுந்த வன்றே.
| [18] |
திருக்கைசென் றரிவாள் பற்றுந் திண்கையைப் பிடித்த போது வெருக்கொடங் கூறு நீங்க வெவ்வினை விட்டு நீங்கிப் பெருக்கவே மகிழ்ச்சி நீடத் தம்பிரான் பேணித் தந்த அருட்பெருங் கருணை நோக்கி அஞ்சலி கூப்பி நின்று.
| [19] |
அடியனேன் அறிவி லாமை கண்டும்என் னடிமை வேண்டிப் படிமிசைக் கமரில் வந்திங் கமுதுசெய் பரனே போற்றி துடியிடை பாக மான தூயநற் சோதி போற்றி பொடியணி பவள மேனிப் புரிசடைப் புராண போற்றி.
| [20] |
என்றவர் போற்றி செய்ய இடபவா கனராய்த் தோன்றி நன்றுநீ புரிந்த செய்கை நன்னுத லுடனே கூட என்றும்நம் உலகில் வாழ்வாய் என்றவ ருடனே நண்ண மன்றுளே ஆடும் ஐயர் மழவிடை உகைத்துச் சென்றார்.
| [21] |
பரிவுறு சிந்தை யன்பர் பரம்பொரு ளாகி யுள்ள பெரியவ ரமுது செய்யப் பெற்றிலே னென்று மாவின் வரிவடு விடேலெ னாமுன் வன்கழுத் தரிவாள் பூட்டி அரிதலால் அரிவாட் டாயர் ஆயினார் தூய நாமம்.
| [22] |
முன்னிலை கமரே யாக முதல்வனார் அமுது செய்யச் செந்நெலின் அரிசி சிந்தச் செவியுற வடுவி னோசை அந்நிலை கேட்ட தொண்டர் அடியிணை தொழுது வாழ்த்தி மன்னும்ஆ னாயர் செய்கை அறிந்தவா வழுத்த லுற்றேன்.
| [23] |
Back to Top
12.140 ஆனாய நாயனார் புராணம்
மாடு விரைப்பொலி சோலையின் வான்மதி வந்தேறச் சூடு பரப்பிய பண்ணை வரம்பு சுரும்பேற ஈடு பெருக்கிய போர்களின் மேகம் இளைத்தேற நீடு வளத்தது மேன்மழ நாடெனும் நீர்நாடு.
| [1] |
நீவி நிதம்ப உழத்தியர் நெய்க்குழல் மைச்சூழல் மேவி யுறங்குவ மென்சிறை வண்டு விரைக்கஞ்சப் பூவி லுறங்குவ நீள்கயல் பூமலி தேமாவின் காவின் நறுங்குளிர் நீழ லுறங்குவ கார்மேதி.
| [2] |
வன்னிலை மள்ளர் உகைப்ப வெழுந்த மரக்கோவைப் பன்முறை வந்தெழும் ஓசை பயின்ற முழக்கத்தால் அன்னம் மருங்குறை தண்டுறை வாவி யதன்பாலைக் கன்னல் அடும்புகை யால்முகில் செய்வ கருப்பாலை.
| [3] |
பொங்கிய மாநதி நீடலை உந்து புனற்சங்கம் துங்க விலைக்கத லிப்புதல் மீது தொடக்கிப்போய்த் தங்கிய பாசடை சூழ்கொடி யூடு தவழ்ந்தேறிப் பைங்கமு கின்தலை முத்தம் உதிர்க்குவ பாளையென.
| [4] |
அல்லி மலர்ப்பழ னத்தயல் நாகிள ஆன்ஈனும் ஒல்லை முழுப்பை உகைப்பின் உழக்கு குழக்கன்று கொல்லை மடக்குல மான்மறி யோடு குதித்தோடும் மல்கு வளத்தது முல்லை யுடுத்த மருங்கோர்பால்.
| [5] |
கண்மலர் காவிகள் பாய இருப்பன கார்முல்லைத் தண்ணகை வெண்முகை மேவு சுரும்பு தடஞ்சாலிப் பண்ணை எழுங்கயல் பாய விருப்பன காயாவின் வண்ண நறுஞ்சினை மேவிய வன்சிறை வண்டானம்.
| [6] |
பொங்கரில் வண்டு புறம்பலை சோலைகள் மேலோடும் வெங்கதிர் தங்க விளங்கிய மேன்மழ நன்னாடாம் அங்கது மண்ணின் அருங்கல மாக அதற்கேயோர் மங்கல மானது மங்கல மாகிய வாழ்மூதூர்.
| [7] |
ஒப்பில் பெருங்குடி நீடிய தன்மையில் ஓவாமே தப்பில் வளங்கள் பெருக்கி அறம்புரி சால்போடும் செப்ப வுயர்ந்த சிறப்பின் மலிந்தது சீர்மேவும் அப்பதி மன்னிய ஆயர் குலத்தவர் ஆனாயர்.
| [8] |
ஆயர் குலத்தை விளக்கிட வந்துத யஞ்செய்தார் தூய சுடர்த்திரு நீறு விரும்பு தொழும்புள்ளார் வாயினில் மெய்யின் வழுத்து மனத்தின் வினைப்பாலில் பேயுட னாடு பிரானடி யல்லது பேணாதார்.
| [9] |
ஆனிரை கூட அகன்புற விற்கொடு சென்றேறிக் கானுறை தீய விலங்குறு நோய்கள் கடிந்தெங்கும் தூநறு மென்புல் அருந்தி விரும்பிய தூநீருண் டூனமில் ஆயம் உலப்பில பல்க அளித்துள்ளார்.
| [10] |
கன்றொடு பால்மறை நாகு கறப்பன பாலாவும் புன்தலை மென்சினை ஆனொடு நீடு புனிற்றாவும் வென்றி விடைக்குல மோடும் இனந்தொறும் வெவ்வேறே துன்றி நிறைந்துள சூழ லுடன்பல தோழங்கள்.
| [11] |
ஆவின் நிரைக்குலம் அப்படி பல்க அளித்தென்றும் கோவலர் ஏவல் புரிந்திட ஆயர் குலம்பேணும் காவலர் தம்பெரு மானடி அன்புறு கானத்தின் மேவு துளைக்கரு விக்குழல் வாசனை மேற்கொண்டார்.
| [12] |
முந்தைமறை நூன்மரபின் மொழிந்தமுறை யெழுந்தவேய் அந்தமுதல் நாலிரண்டில் அரிந்துநரம் புறுதானம் வந்ததுளை நிரையாக்கி வாயுமுதல் வழங்குதுளை அந்தமில்சீ ரிடையீட்டின் அங்குலியெண் களின்அமைத்து.
| [13] |
எடுத்தகுழற் கருவியினில் எம்பிரான் எழுத்தைந்தும் தொடுத்தமுறை யேழிசையின் சுருதிபெற வாசித்துத் தடுத்தசரா சரங்களெலாம் தங்கவருந் தங்கருணை அடுத்தஇசை யமுதளித்துச் செல்கின்றார் அங்கொருநாள்.
| [14] |
வாசமலர்ப் பிணைபொங்க மயிர்நுழுதி மருங்குயர்ந்த தேசுடைய சிகழிகையில் செறிகண்ணித் தொடைசெருகிப் பாசிலைமென் கொடியின்வடம் பயிலநறு விலிபுனைந்து காசுடைநாண் அதற்கயலே கருஞ்சுருளின் புறங்கட்டி.
| [15] |
வெண்கோடல் இலைச்சுருளிற் பைந்தோட்டு விரைத்தோன்றித் தண்கோல மலர்புனைந்த வடிகாதின் ஒளிதயங்கத் திண்கோல நெற்றியின்மேல் திருநீற்றின் ஒளிகண்டோர் கண்கோடல் நிறைந்தாராக் கவின்விளங்க மிசையணிந்து.
| [16] |
நிறைந்தநீ றணிமார்பின் நிரைமுல்லை முகைசுருக்கிச் செறிந்தபுனை வடந்தாழத் திரள்தோளின் புடையலங்கல் அறைந்தசுரும் பிசையரும்ப அரையுடுத்த மரவுரியின் புறந்தழையின் மலிதானைப் பூம்பட்டுப் பொலிந்தசைய.
| [17] |
சேவடியில் தொடுதோலும் செங்கையினில் வெண்கோலும் மேவுமிசை வேய்ங்குழலும் மிகவிளங்க வினைசெய்யும் காவல்புரி வல்லாயர் கன்றுடைஆன் நிரைசூழப் பூவலர்தார்க் கோவலனார் நிரைகாக்கப் புறம்போந்தார்.
| [18] |
எம்மருங்கும் நிரைபரப்ப எடுத்தகோல் உடைப்பொதுவர் தம்மருங்கு தொழுதணையத் தண்புறவில் வருந்தலைவர் அம்மருங்கு தாழ்ந்தசினை அலர்மருங்கு மதுவுண்டு செம்மருந்தண் சுரும்புசுழல் செழுங்கொன்றை மருங்கணைந்தார்.
| [19] |
சென்றணைந்த ஆனாயர் செய்தவிரைத் தாமமென மன்றல்மலர்த் துணர்தூக்கி மருங்குதாழ் சடையார்போல் நின்றநறும் கொன்றையினை நேர்நோக்கி நின்றுருகி ஒன்றியசிந் தையிலன்பை உடையவர்பால் மடைதிறந்தார்.
| [20] |
அன்பூறி மிசைப்பொங்கும் அமுதஇசைக் குழலொலியால் வன்பூதப் படையாளி எழுத்தைந்தும் வழுத்தித்தாம் முன்பூதி வருமளவின் முறைமையே யெவ்வுயிரும் என்பூடு கரைந்துருக்கும் இன்னிசைவேய்ங் கருவிகளில்.
| [21] |
ஏழுவிரல் இடையிட்ட இன்னிசைவங் கியமெடுத்துத் தாழுமலர் வரிவண்டு தாதுபிடிப் பனபோலச் சூழுமுரன் றெழநின்று தூயபெருந் தனித்துளையில் வாழியநந் தோன்றலார் மணியதரம் வைத்தூத.
| [22] |
முத்திரையே முதலனைத்தும் முறைத்தானஞ் சோதித்து வைத்ததுளை ஆராய்ச்சி வக்கரனை வழிபோக்கி ஒத்தநிலை யுணர்ந்ததற்பின் ஒன்றுமுதல் படிமுறையால் அத்தகைமை ஆரோசை அமரோசை களின்அமைத்தார்.
| [23] |
மாறுமுதற் பண்ணின்பின் வளர்முல்லைப் பண்ணாக்கி ஏறியதா ரமும்உழையும் கிழமைகொள இடுந்தானம் ஆறுலவுஞ் சடைமுடியார் அஞ்செழுத்தி னிசைபெருகக் கூறியபட் டடைக்குரலாங் கொடிப்பாலை யினில்நிறுத்தி.
| [24] |
ஆயஇசைப் புகல்நான்கின் அமைந்தபுகல் வகையெடுத்து மேயதுளை பற்றுவன விடுப்பனவாம் விரல்நிரையில் சேயவொளி யிடையலையத் திருவாள னெழுத்தஞ்சுந் தூயஇசைக் கிளைகொள்ளுந் துறையஞ்சின் முறைவிளைத்தார்.
| [25] |
மந்தரத்தும் மத்திமத்தும் தாரத்தும் வரன்முறையால் தந்திரிகள் மெலிவித்தும் சமங்கொண்டும் வலிவித்தும் அந்தரத்து விரல்தொழில்கள் அளவுபெற அசைத்தியக்கிச் சுந்தரச்செங் கனிவாயும் துளைவாயும் தொடக்குண்ண.
| [26] |
எண்ணியநூற் பெருவண்ணம் இடைவண்ணம் வனப்பென்னும் வண்ணஇசை வகையெல்லாம் மாதுரிய நாதத்தில் நண்ணியபா ணியலும் தூக்குநடை முதற்கதியில் பண்ணமைய எழுமோசை எம்மருங்கும் பரப்பினார்.
| [27] |
வள்ளலார் வாசிக்கும் மணித்துளைவாய் வேய்ங்குழலின் உள்ளுறைஅஞ் செழுத்தாக ஓங்கியெழும் மதுரவொலி வெள்ளநிறைந் தெவ்வுயிர்க்கும் மேலமரர் தருவிளைதேன் தெள்ளமுதின் உடன்கலந்து செவிவார்ப்ப தெனத்தேக்க.
| [28] |
ஆனிரைகள் அறுகருந்தி அசைவிடா தணைந்தயரப் பானுரைவாய்த் தாய்முலையில் பற்றுமிளங் கன்றினமும் தானுணவு மறந்தொழியத் தடமருப்பின் விடைக்குலமும் மான்முதலாம் கான்விலங்கும் மயிர்முகிழ்த்து வந்தணைய.
| [29] |
ஆடுமயில் இனங்களும்அங் கசைவயர்ந்து மருங்கணுக ஊடுசெவி யிசைநிறைந்த உள்ளமொடு புள்ளினமும் மாடுபடிந் துணர்வொழிய மருங்குதொழில் புரிந்தொழுகும் கூடியவன் கோவலரும் குறைவினையின் துறைநின்றார்.
| [30] |
பணிபுவனங் களிலுள்ளார் பயில்பிலங்கள் வழியணைந்தார் மணிவரைவாழ் அரமகளிர் மருங்குமயங் கினர்மலிந்தார் தணிவிலொளி விஞ்சையர்கள் சாரணர்கின் னரர்அமரர் அணிவிசும்பில் அயர்வெய்தி விமானங்கள் மிசையணைந்தார்.
| [31] |
சுரமகளிர் கற்பகப்பூஞ் சோலைகளின் மருங்கிருந்து கரமலரின் அமுதூட்டுங் கனிவாய்மென் கிள்ளையுடன் விரவுநறுங் குழலலைய விமானங்கள் விரைந்தேறிப் பரவியஏழ் இசையமுதஞ் செவிமடுத்துப் பருகினார்.
| [32] |
நலிவாரும் மெலிவாரும் உணர்வொன்றாய் நயத்தலினால் மலிவாய்வெள் ளெயிற்றரவம் மயில்மீது மருண்டுவிழும் சலியாத நிலைஅரியுந் தடங்கரியும் உடன்சாரும் புலிவாயின் மருங்கணையும் புல்வாய புல்வாயும்.
| [33] |
மருவியகால் விசைத்தசையா மரங்கள்மலர்ச் சினைசலியா கருவரைவீழ் அருவிகளுங் கான்யாறுங் கலித்தோடா பெருமுகிலின் குலங்கள்புடை பெயர்வொழியப் புனல்சோரா இருவிசும்பி னிடைமுழங்கா எழுகடலு மிடைதுளும்பா.
| [34] |
இவ்வாறு நிற்பனவுஞ் சரிப்பனவும் இசைமயமாய் மெய்வாழும் புலன்கரண மேவியவொன் றாயினவால் மொய்வாச நறுங்கொன்றை முடிச்சடையார் அடித்தொண்டர் செவ்வாயின் மிசைவைத்த திருக்குழல்வா சனையுருக்க.
| [35] |
மெய்யன்பர் மனத்தன்பின் விளைத்தஇசைக் குழலோசை வையந்தன் னையும்நிறைத்து வானந்தன் வயமாக்கிப் பொய்யன்புக் கெட்டாத பொற்பொதுவில் நடம்புரியும் ஐயன்தன் திருச்செவியின் அருகணையப் பெருகியதால்.
| [36] |
ஆனாயர் குழலோசை கேட்டருளி அருட்கருணை தானாய திருவுள்ளம் உடையதவ வல்லியுடன் கானாதி காரணராம் கண்ணுதலார் விடையுகைத்து வானாறு வந்தணைந்தார் மதிநாறும் சடைதாழ.
| [37] |
திசைமுழுதுங் கணநாதர் தேவர்கட்கு முன்நெருங்கி மிசைமிடைந்து வரும்பொழுது வேற்றொலிகள் விரவாமே அசையவெழுங் குழல்நாதத் தஞ்செழுத்தால் தமைப்பரவும் இசைவிரும்புங் கூத்தனார் எழுந்தருளி யெதிர்நின்றார்.
| [38] |
முன்னின்ற மழவிடைமேல் முதல்வனார் எப்பொழுதும் செந்நின்ற மனப்பெரியோர் திருக்குழல்வா சனைகேட்க இந்நின்ற நிலையேநம் பாலணைவாய் எனஅவரும் அந்நின்ற நிலைபெயர்ப்பார் ஐயர்திரு மருங்கணைந்தார்.
| [39] |
விண்ணவர்கள் மலர்மாரி மிடைந்துலக மிசைவிளங்க எண்ணிலரு முனிவர்குழாம் இருக்குமொழி எடுத்தேத்த அண்ணலார் குழற்கருவி அருகிசைத்தங் குடன்செல்லப் புண்ணியனார் எழுந்தருளிப் பொற்பொதுவின் இடைப்புக்கார்.
| [40] |
தீதுகொள் வினைக்கு வாரோம் செஞ்சடைக் கூத்தர் தம்மைக் காதுகொள் குழைகள் வீசும் கதிர்நில விருள்கால் சீப்ப மாதுகொள் புலவி நீக்க மனையிடை இருகாற் செல்லத் தூதுகொள் பவராம் நம்மைத் தொழும்புகொண் டுரிமை கொள்வார்.
| [41] |